டெல்லி: தலைநகர் டெல்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் ஸ்டார் சல்மான் கானும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துக் கொண்டு இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் 54 வீராங்கனைகள் உள்பட 121 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் டெல்லியில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், இந்தியாவின் ஒலிம்பிக் போட்டியாளர்கள் சானியா மிர்சா, விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக், வினோத் தோமர், தீப கர்மகர், மணிக்கா பத்ரா உட்பட இந்திய ஒலிம்பிக் தூதர்களான பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடி வீரர்களை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு நாட்டின் அணிக்கும் நல்லெண்ண தூதுவர் ஒருவரை அந்தந்த நாடுகளின் பிரபலங்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்திய அணியை ஊக்குவிக்கும் விதமாக நல்லெண்ண தூதுவராக ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட சல்மான் கான் அப்போதே வீரர் வீராங்கனைகளை சந்தித்து உற்சாகம் அளித்தார். தற்போது மீண்டும் வழியனுப்பு விழாவில் பங்கேற்று பூங்கொத்து கொடுத்து வீரர்களை வாழ்த்தி வழியனுப்பினார் சல்மான் கான்.
அப்போது பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் எனத் தெரிவித்தார்.