டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இன்று டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பங்கேற்பாளர்கள் சோபிக்காத நிலையில், முதலாவது பதக்கம் சாக்ஷி மாலிக்கிடமிருந்துதான் கிடைத்தது. மல்யுத்தத்தில் அவர் வெண்கலம் வாங்கி கொடுத்து நாட்டுக்கு கவுரவம் சேர்த்தார். இதன்பிறகு நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் சிந்து வெள்ளி வென்று அசத்தினார்.

இவ்விருவர் மட்டுமே இந்தியாவுக்காக ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று தந்தவர்களாகும். சிந்துவுக்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் போட்டி போட்டு கவுரவம் செய்த நிலையில், இன்று டெல்லி திரும்பிய சாக்ஷிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.
இதுபற்றி அவர் கூறுகையில், ஒட்டுமொத்த நாடும் எனக்கு ஆதரவாக இருந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். கேல் ரத்னா விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்றார்.
இதனிடையே, ஹரியானாவிலுள்ள அவரது சொந்த ஊரான மோக்ராகாஸ் என்ற கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பகதுர்கர் என்ற ஊரில் நடைபெற உள்ள பாராட்டுவிழாவில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்கிறார்.