ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் மிடில் வெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் (75 கிலோ) இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் யாதவ், அமெரிக்காவின் 18வயது இளம் வீரர் சார்லஸ் கான்வெல்லை எதிர்கொண்டார். இந்த போட்டியில் இரு வீரர்களுமே வெற்றிக்காக கடுமையாக போராடினர். இறுதியில் விகாஷ் கிருஷ்ணன் 29-28, 29-28, 29-28 என்ற புள்ளிகள் பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி விகாஷ் கிருஷ்ணன் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியையடுத்து விகாஷ் கிருஷ்ணன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார். அடுத்து வரும் போட்டியில் விகாஷ் கிருஷ்ணன் துருக்கி வீரர் ஒன்டர் சைபாலை எதிர்கொள்கிறார்.
இது குறித்து விகாஷ் கிருஷ்ணன் கூறியதாவது: நான் எதிர்கொண்ட வீரர் இளம் வயதானவர். ஆனாலும், அவர் வலிமைமிக்கவர். எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் எதிரணி வீரரை வெற்றி கொண்டேன். எதிரணி வீரர் இதற்கு முன்பாக விளையாடியதை நான் பார்த்ததில்லை. ஆகவே நான் முதல் ஒரு நிமிடம் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என கண்காணித்து அதன் பின்னரே ஆதிக்கம் செலுத்த தொடங்கினேன் என்று கூறினார்.