பாஸ்போர்ட்டில் சொந்த நாட்டை மாற்றி டகால்ட்டி.. வசமாக சிக்கிய கால்பந்து ஜாம்பவான்.. ஷாக் சம்பவம்!
பாராகுவே : பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டின்ஹோ பாராகுவே நாட்டில் போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோ. அவர் பங்கு பெற்ற பிரேசில் அணி 2002இல் உலகக்கோப்பை கால்பந்து தொடரை வென்று அசத்தி இருந்தது.

கால்பந்து களத்தில் பல வித்தைகள் செய்யும் அவர், தற்போது கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
பிரேசில் நாட்டில் 2015ஆம் ஆண்டு அனுமதி இன்றி மீன் பிடி குளம் அமைத்த குற்றச்சாட்டில் ரொனால்ட்டின்ஹோவுக்கு 8.5 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது அந்த நாட்டு அரசு. அதை அவர் செலுத்தாத நிலையில், 2018 ஆம் ஆண்டில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
அவர் பிரேசில் நாட்டை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அவர் பாராகுவே நாட்டுக்கு சென்றார். அங்கே கேசினோ கேளிக்கை விடுதி உரிமையாளர் ஒருவரின் அழைப்பின் பேரில் ரொனால்ட்டின்ஹோ மற்றும் அவரது சகோதரர் இருவரும் சென்றனர்.
அங்கே யாக்ட் அன்ட் கோல்ப் கிளப் என்ற ரிசார்ட்டில் தங்கி இருந்த அவர்களை கண்டுபிடித்த பாராகுவே காவல்துறை, அவரது போலி பாஸ்போர்ட்டை கண்டுபிடித்து, அவரை கைது செய்துள்ளது.
அந்த பாஸ்போர்டில் அவரது அனைத்து தகவல்களும் சரியாக இருந்துள்ளன. ஆனால், சொந்த நாடு என்ற இடத்தில் மட்டும் பிரேசில் என்பதற்கு பதிலாக, பாராகுவே என மாற்றப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி கால்பந்து ஜாம்பவான் ஒருவர் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி சிக்கி இருக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications