திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, இன்று ரன் கேரளா ரன் என்ற பெயரில் கின்னஸ் சாதனை படைக்கும் ஓட்டம் நடந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர் உள்பட 1 கோடி பேர் கலந்து கொண்டு ஓடினர்.
கேரளாவில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின்னர் வருகிற ஜன. 31ஆம் தேதி முதல் பிப்.14ஆம் தேதி வரை தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிக்கு ஆதரவு தெரிவித்தும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் செவ்வாய்க்கிழமையான இன்று கேரளாவில் "ரன் கேரளா ரன்' என்ற பெயரில் ஓட்டம் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு துறை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஓட்டத்தில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்த தானக் குழுவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு ஓடினர்.
மாநிலம் முழுவதும் இந்த ஓட்டம் நடைபெற்றதால் கிட்டத்தட்ட கேரளாவே ஓடியது போன்ற தோற்றம் காணப்பட்டது. காலை 10.20 மணிக்கு தொடங்கிய இந்த ஓட்டத்தில் மொத்தமாக 1 கோடி பேர் பங்கேற்றனர்.
திருவனந்தபுரத்தில் இந்த போட்டியை கேரளா ஆளுநர் சதாசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் உம்மன் சாண்டி,சச்சின் தெண்டுல்கர்,உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பிக்கள் கலந்துக் கொண்டனர்.
தென்மலையில் நடந்த இந்த ஓட்ட பந்தயத்தை கேரளா நடிகர் சரத், நடிகை மஞ்சு, இயக்குனர் அனீஸ் மற்றும் தமிழகத்தை சார்ந்த ஊராட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். ஒரே சமயத்தில் ஒருகோடி பேர் பங்கேற்ற இந்த போட்டி உலக சாதனை படைத்துள்ளதாக போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.