தலைக்கு மேல் கண்காணிப்பு
வழக்கமாக மைதானத்திற்கு வெளியே இருந்தபடி ஜூம் செய்துதான் கேமராமேன்கள், கிரிக்கெட்டை படம் பிடிப்பார்கள். ஆனால் ஸ்பைடர் கேமரா, எனப்படும் புதுவகை கேமராவோ மைதானத்தின் நடு பகுதியில் வீரர்களுக்கு மேலே பறந்தபடி, கீழே நடப்பதை படம் பிடிக்கும். டாப்-ஆங்கிள் படங்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்,.
முதல் சர்ச்சை
இந்த கேமராக்கள் நீண்ட வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அங்குமிங்கும் நகர்த்தப்படுவது வழக்கம். இந்த கேமராக்கள் மீது இதுவரை எந்த வீரரும் புகார் கூறாத நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித் இன்று அதுகுறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
ராகுல் அடித்த பந்து
இந்திய அணியின், ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது வாட்சன் வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டார். ஆனால் பேட்டின் விளிம்பில் பட்ட பந்து ஸ்லிப் பகுதியில் உயர கிளம்பியது. பந்தை பிடிப்பதற்காக சிறிது பின்னோக்கி சென்றார் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்மித்.
தட்டிடுச்சி டீச்சர்
ஆனால் எளிதாக பிடித்திருக்கப்பட வேண்டிய அந்த கேட்சை கோட்டை விட்டார் ஸ்மித். கோட்டை விட்டு மைதானத்தில் விழுந்த ஸ்மித், மேலே கையை காண்பித்து, கேமராவில் பால் மோதிவிட்டதாக குற்றம்சாட்டினார். கீழே வந்த பந்து இடையில் கேமராவில் தட்டுப்பட்டதால் திசை மாறி விழுந்துவிட்டதாகவும், எனவே தன்னால் பந்தை பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். ஸ்பைடர்கேமரா மீதான சர்ச்சையை இவரது குற்றச்சாட்டு உருவாக்கியுள்ளது.
சேனல் மறுப்பு
ஆனால் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பிவரும் ஆஸ்திரேலியாவின் சேனல்9 இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த பந்து கேமராவிலோ அல்லது அதோடு இணைந்த வயர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளிலோ படவில்லை என்று சேனல்9 மறுப்பு தெரிவித்துள்ளது.
ராகுல் சதம்
இந்த சம்பவத்திற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், 110 ரன்கள் குவித்து அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.