இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் சுரேஷ் கல்மாடி போட்டியிட திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இதை எதிர்த்து ராகுல் மெஹ்ரா என்பவர் பொது நல வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,
இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட உள்ள சுரேஷ் கல்மாடி போன்ற சிலர், தேசிய விளையாட்டு வளர்ச்சி மையத்தின் விதிமுறைகளை மீறி போட்டியிட்டு மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜீவ் சகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில், தேசிய விளையாட்டு வளர்ச்சி மையத்தின் விதிமுறைகளை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
68 வயதாகும் கல்மாடி கடந்த 18 ஆண்டுகளாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்து வருகிறார். ஆனால் தேசிய விளையாட்டு வளர்ச்சி மையத்தின் விதிமுறையின் கீழ் ஒரு விளையாட்டு அமைப்பில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பதவியில் இருந்தாலோ அல்லது 70 வயதை அடைந்தாலோ, தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே இந்த விதிமுறையின் கீழ் சுரேஷ் கல்மாடி மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.