லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல அரையிறுதி வரை முன்னேறினார் சாய்னா நேவால். ஆனால் பாட்மிண்டன் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சீனா வீராங்கனைகளின் தாக்குதலை முறியடிக்க முடியாமல் தவித்த சாய்னா, அரையிறுதியில் தோல்வியை தழுவினார்.
இதையடுத்து வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சாய்னா நேவால், சீன வீராங்கனை ஜின் வாங் உடன் மோதினார். இதில் காயமடைந்த சீன வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார். இதனால் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாய்னா நேவால், இந்திய பாட்மிண்டன் அணியுடன் இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதன்பிறகு டெல்லியில் இருந்து மற்றொரு விமானம் மூலம் சாய்னாவின் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங், பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோரும் வந்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சாய்னா நேவால், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக கூறவில்லை என்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
என்னை பொறுத்த வரை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை நான் வெளிப்படையாக கூறினால் மனஅழுத்தம் அதிகரிக்கும் என்பதால், நான் அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதுபோல கருத்து தெரிவித்துவிட்டு, பல வீரர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளதை பார்த்துள்ளேன்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். தற்போது அந்த இலக்கை எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒலிம்பிக் பதக்கம் பெறும் படியில் நிற்பதை விட, ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் பெரிய சாதனை எதுவும் இல்லை.
எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது தந்தை, தாய், பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவிற்கு இன்னும் பல பதக்கங்களை பெற்று தருவேன் என்று நம்புகிறேன்.
கடந்த 4 ஆண்டுகளாக நான் கடந்த வந்த பாதைகளை விட, அடுத்த 4 ஆண்டுகள் நான் செல்ல உள்ள பாதைகள் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். தற்போது எனது தோல்விகளில் இருந்து பல புதிய பாடங்களை கற்று கொண்டுள்ளேன்.
எனது 9வது வயது முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசைபட்டேன். அதற்காக எனது 13வது வயதில் இருந்து பயிற்சியாளர் கோபிசந்த் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
கடந்த 2006ம் ஆண்டு என்னால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாது என்று பலரும் ஏளனமாக பேசினர். ஆனால் இப்போது நான் பாட்மிண்டன் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள வீராங்கனையை வீழ்த்தி உள்ளேன். இதற்காக எனது வாழ்க்கையில் எத்தனையே காரியங்களை இழந்துள்ளேன்.
ஒலிம்பிக் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் சீனா வீராங்கனை காயமடைந்தது வருத்தம் அளித்தது. எனது வாழ்நாளில் இது போன்ற வெற்றியை நான் பெற்றதில்லை. பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீன வீராங்கனை வாங் யஹான் சிறப்பாக செயல்பட்டார். அடுத்த முறை அவரை விட சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன் என்றார்.
சாய்னா நேவாலின் வெற்றி குறித்து அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியதாவது,
சாய்னாவை வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற குறிக்கோள் வைத்து பயிற்சி மேற்கொள்ள கூறினேன். ஆனால் அவர் இந்த ஒலிம்பிக் போட்டியிலேயே சாதித்து காட்டிவிட்டார். இதனால் மீதமுள்ள 2 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் நிச்சயம் பதக்கங்களை வெல்லுவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவற்றில் சாதிப்பதை விட, ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பது உயர்வானது. அதை சாய்னா நேவால் அடைந்துவிட்டார். எனது வாழ்நாளில் நான் ஒரு ஒலிம்பிக் பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் சாய்னா அதை எனக்கு பெற்று தந்துள்ளார் என்றார்.