இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படவில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டது.
இந்த இடைநீக்கத்தால் 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்க முடியாத ஒரு நிலை உருவானது. மேலும் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில், இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் கூட இந்தியாவால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்சர்லந்தின் லாசென் நகரில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நியதிகளுக்கு உட்பட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புக்கொண்டது . இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஒப்புக்கொண்டது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிகளுக்கு உட்பட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் வரும் ஐந்தாம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.