கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டி ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகளை பெற தகுதியுள்ள வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்களை ஏற்கனவே மத்திய விளையாட்டு துறை அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அர்ஜூனா விருதுடன் பாராட்டு சான்றிதழும், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கேல் ரத்னா விருது
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற விஜய்குமார் மற்றும் மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. சான்றிதழுடன் கோப்பை, பதக்கம் மற்றும் ரூ.7.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
8 பேருக்கு துரோணாச்சாரியா விருது
விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்த 8 பயிற்சியாளர்களை பாராட்டும் வகையில், அவர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகள் வழங்கப்பட்டது. துரோணாச்சாரியார் விருது பெறும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டது.
துரோணாச்சாரியா விருது பெற்றவர்களில் குத்துச்சண்டை பயிற்சியாளர் பெர்னாம்டஸும் ஒருவர். இவர் கியூபாவைச் சேர்ந்தவர். துரோணாச்சாரியா விருதைப் பெறும் முதல் வெளிநாட்டவர் பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
4 பேருக்கு டென்ஸிங் நார்கே சாகச விருது
மேலும் கடந்த 2011ம் ஆண்டு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்று சாதனை படைத்த 4 பேருக்கு டென்ஸிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டது. விருதுடன் பாராட்டு சான்றிதழ், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டது.
விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.