சர்வதேச செஸ் போட்டிகளில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் விஸ்வநாதன் ஆனந்த். தற்போது 42 வயதாகும் இவர், 6 முறை முறை செஸ் ஆஸ்கர் பட்டத்தை வென்றவர். தமிழகத்தை சேர்ந்த ஆனந்த், உலக செஸ் வீரர்களுக்கான தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் விஸ்வநாதன் ஆனந்த், எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இப்போதைக்கு நான் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இல்லை. செஸ் விளையாட்டில் இருந்து நான் எப்படி விலக முடியும்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இஸ்ரேல் நாட்டு வீரர் போரிஸ் கில்போண்டை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. அவர் ஒரு திறமையான செஸ் விளையாட்டு வீரர்.
செஸ் போட்டியில் பல புதிய நுணுக்கங்களை நான் இன்றும் கற்று கொண்டு தான் இருக்கிறேன். இதற்காக எனக்கு வரும் சவால்களை நான் எதிர்கொண்டு வருகிறேன். தினமும் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று, உடலை பராமரிக்கிறேன். ஏனெனில் நல்ல உடல்திறன் இல்லாவிட்டால், செஸ் போர்டில் வரும் சவால்களை எதிர் கொள்ள முடியாமல் போகலாம்.
செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக பல இடங்களுக்கு செல்கிறேன். அப்போது அங்கு கிடைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுகிறேன். இதனால் சாப்பாட்டு விஷயத்தில் அதிக கட்டுப்பாடுகள் எதுவும் நான் கடைப்பிடிப்பதில்லை. மேலும் சிறப்பான உணவுகள் எதுவும் நான் உட்கொள்வதும் இல்லை.
செஸ் விளையாட்டை நான் நேசிக்கிறேன். எனவே அதில் என்னால் முடிந்த வரை சாதிக்க முயன்று வருகிறேன். இந்தியாவில் உள்ள இளம்வயதினர் இடையே செஸ் போட்டி தற்போது பிரபலமாகி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருந்து நிலை இப்போது இல்லை. எனவே எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து பல செஸ் சாம்பியன்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் பல போட்டிகளில் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் செஸ் வீரர்களின் தரவரிசையில் நான் பின்னடைவை சந்தித்தேன். இந்த ஆண்டு நான் இழந்த இடத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
சச்சின் ஓய்வு குறித்து ரொம்ப நாளாகவே எல்லோரும் பேசி வருகிறார்கள். அதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த ஆனந்த், சச்சினை யாரும் வலியுறுத்த வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இப்போது ஆனந்திடமே ஓய்வு குறித்த கேள்விகள் பாயத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.