சாம்பியன்ஸ் தொடரில் கலக்கல்
சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று சாதித்தது. அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் ஸ்ரீஜேஷ் என்பதால் ஹாக்கி தேர்வுக்குழு அவரையே ஒலிம்பிக் அணிக்கும் கேப்டனாக தொடரச் செய்துள்ளது.
தமிழக வீரர்
ஸ்ரீஜேஷ் தமிழ்நாட்டுக்காக ஆடிவரும் வீரர் என்பது இதில் கூடுதல் பெருமையாகும். 28 வயதாகும் ஸ்ரீஜேஷ் இந்திய அணிக்காக 156 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.
குக்கிராமம் டூ ரியோ ஒலிம்பிக்
கேரள மாநிலம் எர்ணாக்குளம் அருகேயுள்ள, கீழக்கம்பளம் என்ற குட்டி கிராமத்தில் பிறந்து இன்று இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளார் ஸ்ரீஜேஷ். தொடக்க கல்வியை ஸ்ரீஜேஷ் கிராமத்தில் முடித்த நிலையில், அவருக்கு 12 வயது இருக்கும்போது குடும்பத்தார் திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்குள்ள ஸ்போர்ட்ஸ் பள்ளியில் ஸ்ரீஜேஷ் சேர்ந்த பிறகுதான் ஹாக்கிக்கான வாழ்க்கை பாதை தொடங்கியது.
வங்கி பணி
திருவனந்தபுரத்தில் படித்தபடியே ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த ஸ்ரீஜேஷை இனம் கண்டது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. சென்னையில் அவருக்கு பணி நியமனம் செய்து கொடுத்தது. அது முதல் ஸ்ரீஜேஷ் ஹாக்கி வாழ்க்கைக்கு டாப் கியர்தான்.
நெகிழும் ஸ்ரீஜேஷ்
"கேரளாவை போலன்றி, தமிழகத்தில் ஹாக்கி விளையாட்டுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளது. நல்ல ஜிம்கள் உள்ளன. நான் இப்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்றால் அது தமிழ்நாட்டால்தான்" என்று தனது பேட்டிகளின்போது பெருமிதம் தெரிவித்து வருகிறார் ஸ்ரீஜேஷ்.
கேரள கலாச்சாரம்
கேரளாவின் விளையாட்டு கலாச்சாரம் கால்பந்தை சார்ந்தது. நல்ல வாலிபால் வீரர்களும், பேஸ்கேட் பால் வீரர்களும் கூட உள்ளனர்.. அதேநேரம் ஹாக்கி என்பது அங்கு அரிதானது. பெரும்பாலான குழந்தைகள் எதை விளையாடுகிறதோ அதையேத்தான் பிற குழந்தைகளும் விளையாட வேண்டிவரும் எனவேதான், பஞ்சாப், தமிழகம், ஒடிசாவை போல கேரளாவில் இருந்து அதிக ஹாக்கி பிளேயர்கள் வரவில்லை என்பது ஸ்ரீஜேஷ் கருத்தாக உள்ளது.
பின்தங்க காரணம்
இந்திய ஹாக்கி அணி சமீப காலங்களாக பின் தங்கியதற்கான காரணத்தையும் கூறுகிறார் இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ். ஆம்.. அனைவரும் யூகிக்க கூடிய அதே காரணம்தான். புல் தரையை மாற்றிவிட்டு, ஆஸ்ட்ரோடர்ப் எனப்படும் விரிப்புகளை அறிமுகம் செய்ததுதான் இந்திய ஹாக்கி அணி வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார் இவர்.
2 வருடம் வீணாகிறதே..
இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக ஆசிய அணிகள் எல்லாவற்றுக்குமே இது பின்னடைவுதான். சிறு வயது முதல் புல் தரையில் ஆடிவிட்டு அணிக்கு வரும் வீரர், ஆஸ்ட்ரோடர்ப் தளத்தில் ஆடுவதற்கு, சிரமப்படுகிறார். இதில் தனது முழு திறமையை வெளிக்காட்டி ஆட 2 வருடங்களாவது அவருக்கு தேவைப்படுகிறது. 2 வருட திறமையை நாம் இழக்கிறோம் என்கிறார் ஆதங்கத்தோடு.