டெல்லி: இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து, இந்தியாவின் தடகள வீராங்கனை டின்டு லூகா விலகினார். குதிகாலில் ஏற்பட்ட வலியில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் விலகியுள்ளார்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து 572 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
தடகள வீரர்களுக்கான இறுதி பயிற்சி போட்டிகள் திருவனந்தபுரத்தில் நாளை நடக்க உள்ளது. இந்த நிலையில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கவிருந்த டின்டு லூகா, இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதனால், அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வேகமங்கை பி.டி. உஷாவிடம் பயிற்சி பெற்ற வந்த லூகா, கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
குதிகாலில் ஏற்பட்ட வலியில் கடந்த சில மாதங்களாக எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார். ஜூனில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.