சின்சோ அபே சொன்னது என்ன
சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, இந்த பாதிப்பிலிருந்து ஜப்பான் மீளும். நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகளை பிரச்சினையின்றி, திட்டமிட்ட காலத்தில் நடத்துவோம் என்று கூறியிருந்தார். ஆனால் சோதனையைப் பாருங்க, ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவர் கோசோ தஷிமாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்து விட்டது.
சற்றும் மனம் தளறாத ஜப்பான்
இருந்தாலும் ஜப்பான் சற்றும் மனம் தளரவில்லை. நிச்சயம் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று ஜப்பான் உறுதியாக கூறி வருகிறது. இதற்கிடையே ஜப்பான் துணைப் பிரதமர் தாரோ அசோ கூறுகையில் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு சாபம் உள்ளது. 40 ஆண்டுக்கு ஒருமுறை இப்படி ஒரு பிரச்சினை வருகிறது என்று கூறியுள்ளார் அவர்.
1940ம் ஆண்டு தடை
அவர் இப்படிக் கூறுவதற்கு காரணம் உள்ளது. கடந்த 1940ம் ஆண்டு ஜப்பானில் கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2வது உலகப் போர் மூண்ட காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆனால் அது முதல் முறையல்ல.. அதற்கு முன்பு 1916ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது பெர்லின் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால முதலாம் உலகப் போர் மூண்டதால் அது ரத்தானது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியும் ரத்து
அதன் பின்னர் 1944 லண்டன் ஒலிம்பிக் போட்டியும் ரத்து செய்யப்பட்டது. இப்படி அடுத்தடுத்து 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட வரலாறு உள்ளது. அதன் பின்னர் ஒருபோதும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானதே கிடையாது. ஆனால் இப்போது கொரோனா மிரட்டலால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
1980 ஒலிம்பிக்கில் வந்த சிக்கல்
இருப்பினும் 1980ம் ஆண்டு நடந்த ரஷ்ய ஒலிம்பிக் போட்டியின்போது பல முக்கிய நாடுகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. அதாவது அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்தன. அப்போது ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் படைகள் புகுந்து ஆக்கிரமித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவை புறக்கணிப்பு செய்தன.
நிச்சயம் போட்டி நடைபெறுமாம்
இப்படி ஒரு ஊசலாட்ட வரலாற்றுடன் கூடியதாக உள்ளது ஒலிம்பிக் போட்டிகள். ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் இருப்பினும் கூட ஜப்பான் நாடு போட்டியை நடத்துவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் கூட ஒலிம்பிக் போட்டிகளில் அவசர முடிவு எடுக்கப்படாது தேவையும் இல்லை என்று கூறியுள்ளது. எனவே இந்த நிமிடம் வரை ஒலிம்பிக் போட்டிகளுக்கான பணிகள் திட்டமிட்டபடி தொடரந்து கொண்டுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.