உலக தடகள சாம்பியன்ஷிப் 2022க்கு தள்ளி வைப்பு.. சிக்கலை தீர்க்க அதிரடி முடிவு!
நியூயார்க் : உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் 2022ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகானில் 2௦21இல் நடைபெற இருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர், பல்வேறு சிக்கல்களால் அதிரடியாக 2022ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு உலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டது.
2020இல் நடக்க வேண்டிய ஒலிம்பிக் தொடர் 2021இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் ஒலிம்பிக் தொடருக்கு தீர்வு கிடைத்தாலும், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு சிக்கல் எழுந்தது.
உலக தடகள சாம்பியன்ஷிப் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நடைபெற இருந்தது. அதே தேதிகளில் 2021இல் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கள் தொடரை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய சிக்கலில் இருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிர்வாகம், அதிரடி முடிவு எடுத்து, 2022, ஜூலை 15 முதல் 24 வரை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.
அதே ஜூலை 2022இல் பிர்மிங்காம் 2022 காமன்வெல்த் தொடரும், மல்டிஸ்போர்ட் ஈரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரும் நடைபெற உள்ளது. அவர்களுடன் கலந்து பேசி அவர்கள் தேதிகளில் குழப்பம் வராத வகையில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் 2022ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் முழுவதும் மூன்று சாம்பியன்ஷிப் தடகளப் தொடர்கள் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications