நாங்க யாரும் வரமாட்டோம்.. உலகின் நம்பர் 1 வீராங்கனை விலகல்.. அமெரிக்க ஓபன் தொடருக்கு கடும் பின்னடைவு
நியூயார்க் : உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே பயணம் செய்து நியூயார்க் செல்ல விரும்பாத காரணத்தால் அவர் விலகி உள்ளதாக கூறி உள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முதலில் விலகும் மிகப் பெரிய டென்னிஸ் பிரபலம் ஆஷ்லே பார்ட்டி தான். அவரைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி வீரர், வீராங்கனைகள் விலகலாம் என கருதப்படுகிறது.
பார்ட்டி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தானும், தன் அணியும் அமெரிக்க ஓபன், சதர்ன் மற்றும் வெஸ்டெர்ன் ஓபன் ஆகிய தொடர்களில் பங்கேற்க அமெரிக்கா செல்லப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்பது குறித்து அவர் விரைவில் முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. மே - ஜூன் மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் தொடர், செப்டம்பரில் துவங்க உள்ளது.
கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆன ஆஷ்லே பார்ட்டி இந்த ஆண்டு பங்கேற்பாரா? என்ற கேள்விக் குறியுடன் பிரெஞ்சு ஓபன் காத்துக் கொண்டுள்ளது.
மகளிர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலேப், 2018 அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் நவோமி ஒசாகா, தற்போதைய அமெரிக்க சாம்பியன் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோரும் சதர்ன் மற்றும் வெஸ்டர்ன் ஓபன் தொடர்களில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications