ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள்- புகைமூட்டத்தால் வீரர்கள் திண்டாட்டம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ள நிலையில், அங்கு நிலவிவரும் காட்டுத்தீ காரணமாக பல இடங்களில் கடுமையான புகைமூட்டம் காணப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் வீரர்கள், கடுமையான புகைமூட்டம் காரணமாக தங்களது பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் வரும் திங்கட்கிழமை துவங்கி பிப்ரவரி 2ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்று டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைவர் கிரேக் டைலி கடந்த வாரத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக அளவில் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2 வரை
இந்த ஆண்டிற்கான 108வது ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் வரும் 20ம் தேதி துவங்கி பிப்ரவரி இரண்டாம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நடப்பு சாம்பியன்கள் மோதல்
ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர் பிரிவுகளில் நடப்பு சாம்பியன்களாக உள்ள நோவக் ஜோகோவிச் மற்றும் நவோமி ஒசாகாவும் தற்போது நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

அச்சுறுத்தும் காற்று மாசு
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் காட்டுத்தீ காரணமாக மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் காணப்படுவதால் அங்கு காற்று மாசடைந்து காணப்படுகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். 2000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

நிர்வாகிகள் அறிக்கை
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் மெல்போர்னில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்காக பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக இன்று பயிற்சி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வல்லுநர்களுடன் ஆலோசனை
மேலும் போட்டி நடைபெறவுள்ள மைதானத்தின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ மற்றும் வானிலை ஆய்வாளர்களுடன் தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

நிர்வாகிகள் திட்டவட்டம்
வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டென்னிஸ் ஆஸ்திரேலிய தலைவர் உறுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ள மெல்போர்ன் பார்க்கில் 3 மேற்கூரையிடப்பட்ட மைதானங்களும் 8 உள் விளையாட்டு அரங்குகளும் உள்ள நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கடந்த வாரத்தில் டென்னிஸ் ஆஸ்திரேலியா தலைவர் கிரேக் டைலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications