சர்வதேச வீரர்கள் பங்கேற்பு
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 20ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தடையின்றி நடக்கும் போட்டிகள்
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டிகள் துவங்கி தடையின்றி நடந்து வருகிறது.
ஹோபர்ட் போட்டியில் வெற்றி
இதனிடையே குழந்தை பேறு காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் ஹோபர்ட் கோப்பையை கடந்த வாரத்தில் கைப்பற்றினார்.
தீவிரமாக களமிறங்கும் சானியா
தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சானியா மிர்சா விளையாட உள்ளார்.
கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் விலகல்
இந்நிலையில் ஏற்கனவே கணுக்காலில் ஏற்பட்டிருந்த காயம், கடந்த வாரத்தில் விளையாடிய ஹோபர்ட் சர்வதேச கோப்பையின் இறுதிப் போட்டியின்போது மேலும் தீவிரமடைந்துள்ளதாக சானியா தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சா ஏமாற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபன்னாவுடன் இணைந்து சானியா மிர்சா விளையாடவிருந்த நிலையில், தற்போது இந்த காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சானியா மிர்சா ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
நாடியாவுடன் இணையும் சானியா
ஆனால் தற்போது இந்த வலி ஓரளவு சரியாகி வருவதாக தெரிவித்துள்ள சானியா மிர்சா மகளிர் இரட்டையர் போட்டியில் நாடியா கிச்செனோக்குடன் இணைந்து விளையாடவுள்ளார். இந்த ஜோடி முதல் சுற்றில் சீனாவின் சின்யுன் ஹான் மற்றும் லின் ஜு ஜோடியை எதிர்கொள்ளவுள்ளது.