ரோஜர்ஸ் கப்.. செரீனா வில்லியம்ஸ், போபண்ணா விலகல்!
டொரோண்டோ : செரீனா வில்லியம்ஸ் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக, டென்னிஸ் கனடா அமைப்பு அறிவித்துள்ளது. அதே போல தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வரும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ரோஜர்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸ், சென்ற வாரம் நடைபெற்ற சிலிக்கான் வேலி கிளாசிக் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், ஜோஹனா கொன்டாவிடம் தன் வாழ்நாளின் மோசமான தோல்வியை தழுவினார். அந்த போட்டியில் 6-1, 6-0 என ஜோஹனா வெற்றி பெற்றார். வெறும் ஒரு கேமில் மட்டுமே வென்ற செரீனா, தொடர்ந்து 12 கேம்களை இழந்து தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, தற்போது ரோஜர்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்த டென்னிஸ் கனடா அமைப்பு, செரீனா ரோஜர்ஸ் கோப்பை தொடரில் ஆடாதது ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த ஏமாற்றத்தையும் தாண்டி இந்த தொடர் பெரிய அளவிலான போட்டிகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மறுபுறம், இந்தியாவின் ரோஹன் போபண்ணா விம்பிள்டனில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். ஒருவேளை, ரோஜர்ஸ் கோப்பை தொடருக்காக அவர் ஒரு வாரம் கனடா சென்று வர நேரிடும். அடுத்து ஏசியன் கேம்ஸ் தொடரில் ஆட இருக்கிறார். இந்த நேரத்தில், இந்த தொடரில் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன், முன்னணி வீரர்களான ஆண்டி முர்ரே மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோரும், இந்த தொடரில் இருந்து விலகும் முடிவை அறிவித்து இருந்தனர். சிட்டி ஓபன் தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்ற ஆண்டி முர்ரே, உடற்சோர்வினால், சிட்டி ஓபன் தொடரில் பாதியிலேயே வெளியேறினார். ரோஜர் பெடரர் விம்பிள்டன் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதன் பின், ரோஜர்ஸ் கோப்பையில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்.
Story first published: Monday, August 6, 2018, 10:43 [IST]
Other articles published on Aug 6, 2018


Click it and Unblock the Notifications