பிளாய்ட் படுகொலை
அமெரிக்காவை உலுக்கி வரும் ஜார்ஜ் பிளாய்ட் மரணம் தொடர்பாக அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கருப்பர் இனத்தவர் மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக வெள்ளையர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் வலு கூடி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்று போராடி வருகின்றனர்.
வீராங்கனை கோகோ
தற்போது விளையாட்டு துறையினரும் இதில் ஈடுபட்டுள்ளனர். மைக்கேல் ஜோர்டான் சமீபத்தில் கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது டென்னிஸ் வீராங்கனை கோகோ காப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். புளோரிடா மாகாணம் டெல்ரே பீச் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கோகோ ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு ஆணித்தரமாக இருந்தது.
16 வயது வீராங்கனை
கோகோவுக்கு 16 வயதுதான் ஆகிறது. ஆனால் அவரது பேச்சில் தெறித்த முதிர்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கோகோ பேசுகையில், 50 வருடங்களுக்கு முன்பு எனது பாட்டி இதேபோல போராடினார். இன்று நான் அவரது வயதில் இந்தப் போராட்டக்களத்தில் இருக்கிறேன். வருத்தமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் நேசிப்போம். அனைவரும் நமது நண்பர்களே. அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். அன்பு பாராட்டுவோம்.. நட்பு பாராட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
நாங்களும் நண்பர்களே
கருப்பர்களும் நல்லவர்களே, நண்பர்களே என்பதை நமது மற்ற நண்பர்களுக்குப் புரிய வைப்போம். அதை விட முக்கியம் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது. அதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும். எனக்கு வாக்களிக்கும் வயது இன்னும் வரவில்லை. ஆனால் அந்த சக்தி உங்களிடம் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துங்கள். உங்களது கையில்தான் உங்களது எதிர்காலம் உள்ளது. எனது சகோதரர்களின் எதிர்காலம் உள்ளது. நமது எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குரல் கொடுக்க வேண்டும்
சின்னதோ பெரிதோ.. குரல் கொடுக்கத் தவறாதீர்கள். குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை. நல்லவர்களின் அமைதி என்பது மோசமானவர்களின் செயலை விட கொடுமையானது என்று டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் சொல்லியுள்ளார். எனவே அனைவரும் குரல் கொடுங்கள். குரல் கொடுக்கத் தவறாதீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களை தொடர்ந்து ஏறி மிதித்துக் கொண்டேதான் இருப்பார்கள். மூச்சுத் திணறிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்றார் கோகோ.
கோகோவின் இந்த முதிர்ச்சியான பேச்சுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.