பெண் தோழி, அதிக மதுபழக்கம்..!! சர்ச்சைகளுடன் சாதித்த இளைய விம்பிள்டன் சுமித் நாகல்..! #USOpen
Recommended Video
டெல்லி: 19 வயதில், ஸ்பெயினுக்கு எதிரான டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று, பின்னர் ஒழுக்கக்கேடு காரணமாக நீக்கப்பட்டவர் தான் இன்று அனைவராலும் பேசப்படும் சுமித் நாகல்.
உலகம் முழுவதும் விளையாட்டு துறையில் பேசப்படும் ஒரே விஷயமாகி போனது அமெரிக்க ஓபன் டென்னிஸ். காரணம், யாராலும் அசைக்க முடியாத டென்னிஸ் ஜாம்பவானான பெடரரையே ஆட்டம் காண வைத்த சுமித் நாகல்.
இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரர். அசாத்திய போராடும் குணத்தை கொண்டவர் என்று அவரை அறிந்தவர்கள் சொன்னாலும், பெடரருக்கு எதிரான அவரது ஆட்டத்தை பார்த்தவர்கள் அதனை உணர்ந்தே இருப்பார்கள். அப்படி அனாயசமாக இருந்தது அவரது ஆட்டம்.

சாதாரணமானது
இந்த போட்டி வெற்றி என்னவோ பெடரருக்கு என்றாலும் அது அவருக்கு பழகி போன அல்லது இதுவும் ஒரு வெற்றி என்று சாதாரணமாக கடந்து போகலாம். ஏன் எனில் அவருக்கு வெற்றி புதிதல்ல. ஆனால் நாகலுக்கு கிடைத்த தோல்வியான வெற்றி இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் விஷயம். டென்னிஸ் போட்டியில் அவர் எடுத்த உடனேயே நேரடியாக களத்தில் குதிக்கவில்லை. பல தடைகளை தாண்டி தான் வர வேண்டி இருந்தது.

யார் இந்த சுமித் நாகல்?
காலம் கடந்தும் பேசப்படும் இந்த நிகழ்வின் கதாநாயகனாக உருமாறி இருக்கும் இந்த சுமித் நாகல் யார் என்பது தான் இன்றைய இந்தியாவின் தேடலாகி போனது. சரி... யார் இந்த சுமித் நாகல்?

மிஷன் 2018ல் செலக்ட்
அரியானா மாநிலம் ஜயித்பூர் என்ற கிராமத்தில், சுரேஷ் நாகல், கிருஷ்ண தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் சுமித் நாகல். தந்தை சுரேஷ் நாகல் ஓர் ஆசிரியர். அவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதியின் மிஷன் 2018 என்ற தேர்வில் முதல் பேட்சில் இடம்பெற்றவர் சுமித்.

கனடாவில் பயிற்சி
பின்னர் கனடா பயிற்சியாளர் பாபி மகாலிடம் பயிற்சி பெற்று தேறினார். 2014ம் ஆண்டில், ஜெர்மனியில் இருக்கும் டென்னிஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். உலகின் பார்வையை அவர் தம் பக்கம் திருப்பியது இப்போது அல்ல... 2015ம் ஆண்டிலே அது நடந்தது.

விம்பிள்டன் சாம்பியன்
அப்போது நடைபெற்ற இளையோர் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடரில், வியட் நாமின் லி ஹோயங் நாம் என்பருடன் இணைந்து, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து, 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூரு ஓப்பன் தொடரில் தன்னைவிட ரேங்கில் முன்னணியில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி பட்டமும் வென்றார். அந்த தொடரின் அரையிறுதியில் யூகி பாம்ப்ரியை வென்று, இந்திய டென்னிசில் தமது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.

எழுந்த சர்ச்சைகள்
தற்போது, இவர் அதிக ஆர்வம் காட்டி வருவது ஒற்றையர் பிரிவு போட்டிகளில் தான். யுஎஸ் ஓபனில் பெடரரை எதிர்த்து விளையாடி, தன்னை நம்பிக்கையான வீரர் பட்டியலில் இடம்பெறச் செய்துவிட்டார். இளம் வயதிலே அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், அவர் மீதும் சர்ச்சைகள் எழாமல் இல்லை.

ஒழுக்கக்கேடு விவகாரம்
அவர் 19 வயதான போது நிகழ்ந்த சம்பவம், இன்னும் இந்திய டென்னிஸ் உலகில் பேசப்படும் ஒரு சம்பவமாகும். அந்த ஆண்டில், ஸ்பெயின் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் நாகல் இடம்பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் ஒழுக்கக்கேடு என்ற புகாரின் கீழ், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மறுத்தார் நாகல்
அதாவது இவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை என்று சொல்ல முடியாது. பயிற்சிக்கு உரிய நேரத்தில் வருவது கிடையாது, பயிற்சியில் கலந்து கொள்வது இல்லை, பல நேரங்களில் பெண் தோழியை பயிற்சி முகாமுக்கு அழைத்து வருவது என பல புகார்கள் நாகல் மீது எழுந்தது உண்டு. ஆனால் அனைத்தையும் ஏக தேசமாக அவர் மறுத்தார். சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் இந்த ஒரு சாதனை காலம் முழுவதும் பேசும்.


Click it and Unblock the Notifications