டெல்லி: 20க்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்தியாவின் சாதனை நாயகன் லியாண்டர் பயஸ்.
இந்திய டென்னிஸ் உலகம் கண்ட மாபெரும் சாதனையாளர் லியாண்டர் பயஸ். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த டென்னிஸ் பெரும் புயல். சொந்த வாழ்க்கையில் பல சூறாவளிகள் குறுக்கிட்டாலும் கூட டென்னிஸ் வாழ்க்கையில் இவரை ஆட்டவோ, அசைக்கவோ முடியாத நிலையே இன்றளவும் தொடர்கிறது.
சமீபத்தில்தான் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றார் பயஸ். சாதனை நாயகனாக வலம் வரும் லியாண்டர் பயஸ் இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆனால் இது போதாது என்று கூறும் பயஸ், 20 அல்லது அதற்கு மேலும் வெல்லவே ஆசை என்று கூறிச் சிரிக்கிறார்.
இதுகுறித்து பயஸ் கூறுகையில் நான் வரலாறு படைப்பதை விரும்புகிறேன். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாலும் கூட நான் ஓய மாட்டேன். எனது தந்தைதான் எனது முதுகெலும்பாக திகழ்கிறார். அவர் எனது ரசிகர் என்பதை விட எனது சரியான விமர்சகர். அவர்தான் என்னை செதுக்கினார். அவர் இல்லாவிட்டால் நான் இந்த இடத்தில் நின்றிருக்க முடியாது.
எனது பயிற்சியாளரும் டிராவல் துணைவருமான சஞ்சய் சிங்குக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல வேண்டும். கடுமையான சூழலிலும் என்னை விட்டு அகலாமல் இருப்பவர் சிங் என்றார் பயஸ்.
உலக அளவில் அதிக அளவிலான கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனை மார்ட்டினா நவரத்திலோவாவிடம் உள்ளது. அவர் 10 பட்டங்களை வென்றுள்ளார். அதை பயஸ் சமன் செய்துள்ளார்.