ஜகார்த்தா: இந்தோனேசியா மாஸ்ட்ர்ஸ் ஓபன் மகளிர் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. அரையிறுதியில் சீன வீராங்கனை பிங்ஜியாவை வீழ்த்திய சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் சாயனா நேவால் ல தர வரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர் கொண்டார். போட்டி தொடங்கியதில் இருந்தே கரோலினா மிக சிறந்த நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் செட்டில் கரோலினா 9க்கு 3 என முன்னிலையில் இருந்தார். அப்போது, அவர் சாய்னா அடித்த பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது, தவறி கீழே விழுந்தார். வலது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து வலியால் துடித்தார்.
சில நிமிடத்தில் மீண்டு வந்தபோதும், வலி அதிகமாக கண்ணீர் விட்டு அழுதார். காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து பாதியில் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இறுதிபோட்டி... கரோலினாவின் காரணமாக மிகவும் சுவாரசியம் இல்லாமல் முடிந்துவிட்டது. சாம்பியன் பட்டம் பெற்ற சாய்னாவும், கரோலினாவும் இதுவரை 12 முறை நேருக்குநேர் மோதிக்கொண்டனர். இருவரும் தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.