ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு, உதவி ஆட்சியர் பணி நியமன ஆணையை நேரில் வழங்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கெளரவித்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, வெகு விமர்சையாக பாராட்டு விழா நடத்தினார். அப்போது அவர் பி.வி.சிந்துவுக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகை, மற்றும் அமராவதியில் வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
மேலும், பி.வி.சிந்து விரும்பினால் ஆந்திராவில் உதவி ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்த விழாவில் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனை வீராங்கனை பி.வி. சிந்து ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, நேற்று ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் பி.வி. சிந்துவுக்கு பணி நியமன உத்தரவை சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனை பி.வி சிந்து, 'பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆந்திர முதல்வர் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்கப்படுத்துகிறார்.
இதன் மூலம் பலர் விளையாட்டு துறையில் சாதிக்க முன் வருகின்றனர். விளையாட்டு துறையில் மேலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது என் வாழ்நாள் இலக்கு" என்று தெரிவித்தார்.