சீனாவின் சாங்சு நகரில் சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில், இந்தியாவின் சிந்துவும், சீனா வீராங்கனை லி சியுரியும் மோதினர்.
உலக பாட்மிண்டன் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீனா வீராங்கனையிடம், 24வது இடத்தில் உள்ள சிந்து தோல்வி அடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லி சியுரி, போட்டியின் துவக்கம் முதலே சிந்துவின் தாக்குதலுக்கு திணறினார். இதனால் முதல் செட்டை 21-19 என்று கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
ஆனால் 2வது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய சீன வீராங்கனை 9-21 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற, முடிவில் 21-16 என்ற கணக்கில் சிந்து செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
45 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியில் சிந்து 21-19, 9-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பிறகு, பாட்மிண்டன் போட்டியில் சிறப்பான ஆடி வெற்றிகளை பெற்று வருகிறார் சிந்து. 17 வயதாகும் இவர், இந்திய பாட்மிண்டன் அணியின் இன்னொரு வளரும் நட்சத்திரமாக உருவாக வாய்ப்புள்ளது.