ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், 51 கிலோ எடை பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் பங்கேற்றார். தகுதி சுற்றில் இருந்து அரையிறுதி போட்டி வரை முன்னேறிய மேரி கோமிற்கு, வெண்கலப்பதக்கம் உறுதியானது. ஆனால் அரையிறுதியில் வெற்றி பெற்று தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் பெறும் முயற்சியில் மேரி கோம் ஈடுபட்டார்.
ஆனால் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை நிக்கோலா ஆடம்ஸிடம் 11-6 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் தோல்வியை தழுவினார். இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை மேரி கோம் இழந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவு அளித்த இந்திய ரசிகர்களிடம், மேரி கோம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாடு முழுவதும் நான் தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்தது. ஆனால் என்னால் வெண்கலப் பதக்கம் மட்டுமே வாங்க முடிந்தது.
இங்கிலாந்து வீராங்கனை நிக்கோலஸ் ஆடம்ஸ் மிகவும் வேகமாக செயல்பட்டார். மேலும் அவரது தாக்குதல் சிறப்பாக இருந்தது. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது திருப்தி அளிக்கிறது. ஆனால் இதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன்.
போட்டியில் எனது முழு திறமையும் வெளிப்படுத்தினேன். ஆனால் சில தவறுகள் செய்ததால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. எனது வெற்றிக்காக கடவுளிடம் வேண்டி கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.