களம் ரெடி.. களமாட 1122 வீரர்களும் தயார்.. அனல் பறக்கப் போகும் ஐபிஎல் ஏலம்
பெங்களூரு: 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் களை கட்டத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் 1122 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்களின் பதிவுக்கான கடைசித் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 1122 பேர் உள்ளனர்.
ஜனவரி 27ம் தேதி பெங்களூருவில் ஏலம் நடைபெறவுள்ளது. 28ம் தேதி வரை அது நடைபெறும். இதில் ஏலம் போகப் போகும் வீரர்கள் யார், யாருக்கு அதிக தொகை கிடைக்கப் போகிறது என்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின், கம்பீர், யுவராஜ் சிங்
ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. அஸ்வின், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், அஜிங்கியா ரஹானே, குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், முரளி விஜய் ஆகியோருக்கு பெரும் கிராக்கி இருக்கும் எனத் தெரிகிறது.

கெய்ல் புயல் யாருக்கு
அதேபோல கிறிஸ் கெய்ல், பென் ஸ்டாோக்ஸ், கிறிஸ் லின், இயான் மாரர்கன், மிட்சல் ஸ்டார்க், பாட் கமின்ஸ் ஆகியோருக்கும் நல்ல கிராக்கி இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக கெய்லை பெங்களூரு தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

முதல் முறையாக ரூட்
இங்கிலாந்து ஸ்டார் வீரர் ஜோ ரூட் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கிறார். அவர் எந்த அணிக்குப் போவார் என்பது எதிர்பார்ப்புக்குரியது. இதேபோல டிவியான் பிராவோ, கார்லோஸ் பிராத்வெய்ட், எவின் லூயிஸ், ஜாசன் ஹோல்டர் ஆகியோரும் ஏலத்தில் உள்ளனர்.

ஏலத்தில் 282 வெளிநாட்டு வீரர்கள்
மொத்தம் 282 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வீரரர்கள் 58 பேர் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா 57, இலங்கை 39, மேற்கு இந்தியத் தீவுகள் 39, நியூசிலாந்து 30, இங்கிலாந்து 26, ஆப்கானிஸ்தான் 13, ஜிம்பாப்வே 7, வங்கதேசம் 8, அயர்லாந்து 2, ஸ்காட்லாந்து 1, அமெரிக்கா 2.


Click it and Unblock the Notifications