2011 உலகக்கோப்பை
9 ஆண்டுகள் கழித்து 2011 உலகக்கோப்பை தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தான் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் புகார்
அவர் முன்னதாக ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இலங்கை அணி விற்று விட்டதாக கூறி இருந்தார். வெற்றி பெற வேண்டிய போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்து தோல்வி அடைந்ததாகவும் கூறினார்.
சில குழுக்கள்
அதே சமயம், இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் ஈடுபடவில்லை எனவும், சில குழுக்கள் ஈடுபட்டதாகவும் கூறி இருந்தார். அவர் எந்த ஆதாரத்தையும், குறிப்பிட்ட நபர்களின் பெயர்களையும் கூறவில்லை. தேர்தல் வரும் நிலையில் அவர் அரசியல் லாபத்துக்காக இவ்வாறு பேசுவதாக கருதப்பட்டது.
கோபம்
முன்னாள் கேப்டன்கள் மகிளா ஜெயவர்தனே மற்றும் குமார் சங்ககாரா அவரது புகாருக்கு பதிலடி கொடுத்தனர். ஆதாரத்தை காண்பிக்குமாறும், ஆதாரத்தை எடுத்துக் கொண்டு ஐசிசி குற்றத் தடுப்பு பிரிவில் புகார் செய்யுமாறும் கூறினர்.
வீரர்கள் இல்லை
இந்த நிலையில், அவர்களின் கோபத்துக்கு பதில் அளித்த மஹிந்தானந்த அலுத்கமகே இந்த மேட்ச் பிக்ஸிங்கில் வீரர்கள் யாரும் ஈடுபடவில்லை என்றும், சில இலங்கை கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
அதிகாரிகள் மீது சந்தேகம்
2011 உலகக்கோப்பை தோல்வி அடைந்த அதே ஆண்டில் சில இலங்கை அதிகாரிகள் கார் கம்பெனிகளை வாங்கியதகாவும், புதிய வியாபாரங்களை துவங்கியதாகவும் கூறிய மஹிந்தானந்த அலுத்கமகே, அது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பி இருந்தார்.
நான்கு வீரர்கள் மாற்றம்
இந்த நிலையில், மேலும் தன் புகாருக்கு வலு சேர்க்கும் வகையில் அந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியில் நான்கு வீரர்கள் மாற்றப்பட்டதாக கூறி உள்ளார். அந்த விஷயம் நிர்வாகத்துக்கு தெரியாமல் நடந்ததாகவும் கூறி இருக்கிறார்.
கடைசி நிமிடத்தில் மாற்றம்
"இறுதிப் போட்டியில் ஆடிய அணி, நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய அணி அல்ல. கடைசி நிமிடத்தில் என்னிடம் கலந்து பேசாமல், இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகளிடம் பேசாமல் நான்கு புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்." என்றார் மஹிந்தானந்த அலுத்கமகே.
அனுபவம் இல்லாதவர்கள்
மேலும், "இதை நாங்கள் போட்டி நடந்த போது தான் பார்த்தோம். எப்படி நான்கு வீரர்கள் எந்தவித ஆலோசனை மற்றும் ஒப்புதல் இல்லாமல் மாற்ற முடியும்? புதிய வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். ஏன் அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் இப்படி செய்ய வேண்டும்?" எனவும் தன் சந்தேகத்தை கூறி இருக்கிறார் முன்னாள் அமைச்சர்.
இந்திய செய்தித் தாள்
மேலும், இந்த அணி மாற்றம் அமைச்சருக்கும், போர்டு அதிகாரிகளுக்கும் தெரியாத நிலையில், இந்திய செய்தித் தாள் ஒன்றுக்கு முன்தினமே தெரிந்து இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டினார் அவர். இந்த தொடர் புகார்களால் இலங்கை கிரிக்கெட்டில் புயல் வீசத் துவங்கி உள்ளது.