2௦20 ஒலிம்பிக் போட்டி ரத்து செய்ய முடிவு? வெளியான அதிர்ச்சித் தகவல்!
டோக்கியோ : 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒலிம்பிக் தொடர் நடக்குமா? என சில வாரங்களாக சந்தேகம் இருந்து வந்தது.
போட்டி நிச்சயம் பாதுகாப்பாக நடைபெறும் என 2020 ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு கூறி வந்த நிலையில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

2020 ஒலிம்பிக் போட்டி
2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது ஜப்பான். பல ஆயிரம் கோடி பணத்தை கொட்டி உள்கட்டமைப்புகள் மற்றும் வீரர்கள், ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ்
இந்த நிலையில், 2020 ஜனவரி மாதம் முதல் சீனாவில் கொரோனா என்ற வைரஸ் கிருமியால் பாதிப்பு ஏற்பட்டது, முதலில் வூஹான் என்ற ஒரு மாகாணத்தில் பரவத் துவங்கிய அந்த வைரஸ், தற்சமயம் பல நாடுகளிலும் பரவி விட்டது.

80,000 மக்கள் பாதிப்பு
இதுவரை சுமார் 80,000 மக்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. பல ஆயிரம் பேர் இறந்தும் போய் உள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செல்பவர்களால் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக கருதப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அதனால், விமான நிலையங்களில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளிலும் சீன பயணிகள் வந்தால், அவர்களை தனிமைப்படுத்தும் நிலையும் உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஜப்பானில் கொரோனா
ஜப்பானில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 800-ஐ தாண்டி விட்டது. மேலும், ஜப்பான் அரசு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக துரிதமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அந்த அரசால் ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்த முடியுமா? என்ற விமர்சனமும் எழுந்தது.

பல விஷயங்கள் துவங்க வேண்டும்
இந்த நிலையில், கனடாவை சேர்ந்த முன்னாள் நீச்சல் சாம்பியன் வேட் கூறுகையில், "இந்த நேரத்தில் பலரும் இப்படி கேட்கிறார்கள் : இது எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளதா.. நீங்கள் டோக்கியோ செல்வதில் உறுதியாக இருக்கிறீர்களா?. இன்னும் பல விஷயங்கள் இனி தான் துவங்க வேண்டும்" என்றார்.

ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
மேலும், "பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். உணவு மற்றும் ஒலிம்பிக் கிராமம், ஹோட்டல் என அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும். ஊடகங்கள் தங்கள் ஸ்டுடியோக்களை அங்கே உருவாக்க வேண்டும்" என்றார். ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் இன்னும் பல உள்ளன என்றார் அவர்.

ரத்து செய்யப்படும்?
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்த ஏற்பாடுகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் உறுப்பினர் டிக் பவுண்டு, "நீங்கள் கிட்டத்தட்ட ரத்து செய்யப்படுவதை தான் பார்க்கப் போகிறீர்கள்" என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

கிராண்ட் பிரிக்ஸ் ஒத்திவைப்பு
முன்னதாக சீனாவில் நடைபெற இருந்த 2020 பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 11 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டு, இறந்துள்ளனர். இந்த நிலையில், அங்கே சிரீ ஏ கால்பந்து தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து தொடர்
அந்த கால்பந்து தொடரில் முக்கிய போட்டிகள் கூட மூடப்பட்ட மைதானத்துக்குள் தான் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பல பெரிய விளையாட்டுத் தொடர்களை நடக்கக் விடாமல் செய்யப் போகிறது என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications