விறுவிறுப்பான போட்டி
அதேபோன்று முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியை வீழ்த்த தயாராகி வருகிறது. எனவே இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
கோலிக்கு காயம்
ஆனால், இந்திய அணிக்கு தற்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது வலதுகையின் பெருவிரலில் காயமடைந்தார். உடனே முதலுதவி சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும் வலியும் வீக்கமும் குறையாமல் இருந்ததால் கோலி பயிற்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.
அறிவிப்பு இல்லை
அவருடைய காயம் குறித்த எந்த தகவலும் இதுவரை அணி நிர்வாகம் சார்பாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கோலி வலியால் அவதிப் பட்டு வருவதாகவும், வீக்கம் குறையாமல் இருப்பதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி களம் இறங்குவது சந்தேகமாக உள்ளது.
கேப்டன் ரோகித்?
ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல் படுவார். கோலியின் 3ம் இடத்தில் யாரை விளையாட வைக்கலாம் என்று எதிர்பார்ப்புகளும் ஊகங்களும் தொடங்கியிருக்கின்றன. கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, தோனி ஆகிய 5 பேரில் யாரை விளையாட வைக்கலாம் என்று பேச்சுகள் கிளம்பி இருக்கின்றன.
தோனிக்கு 3வது இடம்
அவர்களில் தோனி, 3வது இடத்தில் பேட் செய்து கிட்டத்தட்ட10 ஆண்டுகள் ஆகி விட்டன. 2009ம் ஆண்டுக்கு பிறகு அவர் 3வது வீரராக களம் இறங்கியது இல்லை. எனவே, அவருக்கு வாய்ப்புகள் குறைவு என்று சொல்லலாம். மற்றவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் ஹர்திக் பாண்டியா ஒருமுறை கூட 3வது வீரராக விளையாடியது இல்லை.
விஜய் சங்கர்?
விஜய் சங்கருக்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும். ஏன் என்றால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில், இந்திய அணி 18/4 என்று தடுமாறிய போது, அணியில் நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் எடுத்தவர். ஒருவேளை தென் ஆப்ரிக்காவுக்கான அணியில் அவர் எடுக்கப் பட்டால் 3ம் வீரராக களம் இறக்கப்படலாம்.
தினேஷ் கார்த்திக் தயார்?
மற்றொருவரான தினேஷ் கார்த்திக்கும் 3ம் வீரராக களம் இறங்க பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 91 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவர். 15 ஆண்டு கால அனுபவம், ஐபிஎல் தொடரில் கேப்டனாக பணியாற்றியவர், அணியில் அவரது தேர்வை நியாயப்படுத்திய கோலிக்கு பதில் இவரே பொருத்தமானவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ராகுல் சரியான தேர்வு
கடைசியாக கேஎல் ராகுல். 3ம் வீரர் என்பது கிட்டத்தட்ட தொடக்க வீரர் என்பதை போன்று தான். எனவே, ராகுலுக்கு அது சரியாக இருக்கும். தமது 14 ஒரு நாள் போட்டி அனுபவத்தில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3ம் வீரராக களம் இறங்கியிருக்கிறார். எனவே, அவரும் பரிசீலனையில் இருக்கிறார். இவை அனைத்தும் கோலி விளையாட வில்லை என்றால் தான் நடக்கும். எனவே, அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ, அதை பொறுத்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.