2 வருட தடை.. தொடர் அவமானம்.. கடைசியில் ஒரு ஐபிஎல் கோப்பை.. தோனி கற்றுக்கொடுத்த 5 விஷயங்கள்!
Recommended Video

சென்னை: சென்னையை வழிநடத்தி ஐபிஎல் 2018 கோப்பையை வெல்ல வைத்திருக்கும் தோனியிடம் இருந்து உலகில் உள்ள எல்லோரும் சில முக்கியமான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கை தொடங்கி பரபரப்பான அலுவலக வாழ்க்கை வரை எல்லாவற்றிலும் இந்த விதிகளை பயன்படுத்த முடியும்.
சென்னை அணி ஐபிஎல் 2018 கோப்பையை வென்றதற்கு பின், தோனி கடைபிடிக்கும் மிக முக்கியமான கொள்கைகள் இருக்கிறது. தோனி கிரிக்கெட் உலகைவிட்டு போன பின்பு கூட அவரின் இந்த கொள்கைகள் கண்டிப்பாக எக்காலத்திற்கும் பேசப்படும்.
சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அதிரடியாக வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது.

நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்
இந்த வெற்றிக்கு எல்லாமே முதலில் ஒரு புள்ளியாக அமைந்தது அணி தேர்வுதான். சென்னை அணியை மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்தது தோனிதான். தனக்கு கீழ் இவர்கள்தான் விளையாட வேண்டும் என்று தோனி கேட்டிருந்தார். ஒரு நல்ல தலைவனுக்கு இது மிக முக்கியம். ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும், அவர் யார், அவரை நம்முடன் இருக்கலாமா, அவரை எடுத்துக் கொள்ளலாமா என்று சரியாக கணித்து தனக்கு ஏற்ற அணியை தேர்வு செய்தார். அஸ்வினுக்கு பதில் ஹர்பஜனை எடுத்தது கூட இதே தலைமைப்பண்பு மூலம்தான்.

எப்போது ஆதரவு
அது எப்படி பார்ம் அவுட் வீரர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தா மட்டும் பார்மிற்கு வந்துடுறாங்க? என்று கேள்வி பல காலமாக கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு தோனியின் தலைமைப்பண்புதான் மிக முக்கிய காரணம். நெஹ்ரா தொடங்கி எல்லா வீரர்களையும் தோனி பார்மிற்கு கொண்டு வந்துள்ளார். தன்னுடைய அணியில் இருப்பவர் எவ்வளவு மோசமான வீரராக இருந்தாலும், அவரை எப்படி வழிநடத்த வேண்டும், எப்படி ஆதரவாக இருக்க வேண்டும் என்பது தோனிக்கு தெரியும். இதை நம்முடைய வாழ்க்கையிலும் அப்ளே செய்து பார்க்கலாம்.

அவ்வப்போது கோபம்
தோனியிடம் முக்கியமாக கற்றுக்கொள்வது கூல் என்பார்கள். ஆனால் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது கோபம்தான். அவரிடம் யாரையும் புண்படுத்தாத கோபம் ஒன்று இருக்கிறது. முதல் நாள் போட்டியில் ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை நேரடியாக திட்டாமல், ஆனால் அவர் புரிந்து கொள்ளும்படி பத்திரிக்கையாளர் சந்திப்பில் திட்டுவதும், களத்திலேயே நேரடியாக அறிவுரை வழங்குவதும் தோனியால் மட்டுமே வித்தியாசமாக செய்ய முடியும். இந்திய அணியில் தொடங்கி சென்னை அணி வரை அதுதானே நடந்துள்ளது.

எப்போதும் கீப் தி ஸ்பிரிட்
சென்னை அணி வரிசையாக வெற்றி பெற்றுக்கொண்டே வந்தது. ஆனால் தோனி அதை கொஞ்சம் கூட கொண்டாடவில்லை. சென்னை கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும் என்ற நிலை வந்த போது கூட தோனி அதை கொண்டாடவில்லை. புனே அணியில் அவர் அவமானப்படுத்தப்பட்டதை, அந்த கோபத்தை நேற்றைய போட்டியில் கோப்பையை வெல்லும் வரை அவர் மனதில் வைத்து இருந்தார். அந்த தீ அணையாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.. அந்த தீ தான் சென்னையை பீனிக்ஸாக எழ வைத்தது.

வெற்றிக்கு பின்
கடைசியாக எப்போதும் தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அதே விஷயம்தான். வெற்றிபெற்றவுடன் வேகமாக ஓடி களத்தில் நின்று குதிக்காமல், பொறுமையாக விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டினார். கொடுத்த கோப்பையை கூட உடனே கொடுத்துவிட்டு, மகள் ஷிவாவுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தோனி எப்போதும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. கடைசி போட்டியில் தோற்று இருந்தாலும் தோனி அப்படித்தான் இருந்திருப்பார். அவர் தோல்வியையும் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை.


Click it and Unblock the Notifications