
டிவில்லியர்ஸ் ஓய்வு
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திரம் ஏ.பி. டிவில்லியர்ஸ். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் ஏமாற்றம்
இதன்பிறகு 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கை அந்நாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அடுத்ததாக வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் ஏ.பி. டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவாரா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் டிவில்லியர்ஸ் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் தனது ஓய்வு முடிவிலேயே இருப்பதாகவு, மீண்டும் விளையாட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

வெல்லவே முடியாது
இந்நிலையில் டிவில்லியர்ஸ் இல்லாமல் உலகக்கோப்பை வெல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டிவில்லியர்ஸ் இருந்தால் அந்த அணியின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் இல்லையென்றால் அவரை போன்ற சிறந்த வீரரை அந்த அணியால் பெற முடியாது. தென்னாப்பிரிக்காவில் இப்போதும் நல்ல வீரர்கள் உள்ளனர் தான். ஆனால் அவர்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியுமா என்று பார்த்தால், நான் முடியாது என்றுதான் கூறுவேன்.

பிரச்னையே இதுதான்
டிவில்லியர்ஸ் இருக்கும் போதும் கூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் அவர் இருக்கும் போது தென்னாப்பிரிக்கா சிறப்பாக ஆடியது. ஆனால் இந்த முறை அவர்களின் அணி சிறப்பாக இல்லை. கடினமான நேரங்களில் அவர்கள் திணறுவார்கள். அவர்களுக்கு இக்கட்டான சூழல்களை கையாள தெரியவில்லை என்பதே உண்மை. எனவே டி20 உலகக்கோப்பை வெல்வது கடினம் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











