கொரோனா வைரஸ் பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் இந்த தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் தொடர்கள்
இந்நிலையில் அடுத்த ஆண்டும் வரும் 2023லும் டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களை இந்தியா நடத்தவுள்ளது. இந்த ஆண்டு தொடர் நடத்த முடியாதநிலையில், இந்த தொடர்களிலும் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறுவதில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆரோன் பிஞ்ச் விளக்கம்
இதனிடையே, வரும் மார்ச் மாதத்தில் இருந்து வீட்டில் முடங்கியிருந்தாலும் தான் சும்மா இருக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். குறைந்த ஓவர் கிரிக்கெட்டின் கேப்டனாக உள்ள ஆரோன் பிஞ்ச் வரும் 2023ல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியா வெற்றி கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை தான் ஆய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் ஆல்-ரவுண்டர்
மேலும் 2 டி20 மற்றும் ஒரு ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தங்கள் அணி மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 2023ல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இரண்டு ஸ்பின்னர்கள், கூடுதலாக ஆல்-ரவுண்டர் போன்றவை அவசியம் என்றும், அது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தான் தொடர்ந்து யோசித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.