மும்பை: முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐபிஎல் போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் முதல் ஃபீல்டிங்கில் கில்லியாக இருக்கும் சர்வதேச வீரர்கள் என அனைவரும் கேட்ச் பிடித்தார்களோ இல்லையோ... நிச்சயம் ஓரிரு கேட்சுகளைத் தவறவிட்டுள்ளனர். அதே நேரத்தில், "பிடிக்கவே முடியாது, வாவ்.. எப்படி இந்த மாதிரி எல்லாம் கேட்சுகளைப் பிடிக்கிறார்கள் என்று ரசிகர்கள் கொண்டாடியத் தருணங்களும் இருக்கத்தான் செய்கிறது."
ஒரு அணிக்கு ஒரு பயிற்சியாளர் என்கிற நிலை மாறி, பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங், 'மெண்டல் கண்டிஷனிங்' (போட்டிகளுக்கு ஏற்றவாறு மனநிலையை சீராக வைத்துக்கொள்ள) என்று விளையாடுவதற்கு இருபது நபர்கள் என்றால், அவர்களை பல்வேறு துறைகளில் பயிற்சியில் ஈடுபடுத்த கிட்டத்தட்ட் அதே அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பயிற்சியாளர், மேற்பார்வையாளர், மற்றும் முழு உடற்தகுதியோடு இருந்தால் மட்டுமே ஆட முடியும் என்கிற பலத்த கட்டுப்பாடுகள் இருந்தும், பல்வேறு கேட்சுகளை கோட்டை விடுவது எதனால் என்று எவ்வளவு ஆராய்ந்தாலும், இதுதான் பிரச்சனை என்று சொல்ல முடியவில்லை.
ஆனால், கொஞ்சம் சராசரியான ரசிகனை விட கொஞ்சம் உள்ளார்ந்து ஆட்டத்தை நோக்கினால், எம்மாதிரியான கேட்சுகளை அதிகம் தவறவிட்டிருக்கிறார்கள் என்று எளிதாக காண முடியும். ஃபிளாட்டாக அடிக்கப்பட்ட பந்துகளை பிடிப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை, அதே நேரத்தில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு, வானத்தைத் தொட்டு விட்டுத் திரும்பும் பந்துகளைத் தான் அதிகம் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஏன்?
நம்மூரில் இருக்கும் மைதானங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஒளி வெள்ளங்கள் (ஃபிளட் லைட்) சீரானதாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி மைதானத்தில் மட்டுமே பதினாறு லைட் டவர்கள் இருக்கும். ஏனைய மைதானங்களில் நான்கு டவர்கள் மட்டுமே இருப்பதை பார்த்திருக்கலாம். முக்கால்வாசி போட்டிகள் இரவு நேரங்களில் நடப்பதால், மேலிருந்து கீழ்நோக்கி வரும் பந்தை, அது கீழே வரும் கடைசி தருணங்களில் மட்டுமே நன்றாக பார்க்க முடியும். அதற்குள் சுதாரித்து, கேட்சை பிடிப்பதென்பது கொஞ்சம் கடினம்தான்.
பதினாறு டவர்கள் மற்றும் நான்கு டவர்களிலிருந்து வரும் வெளிச்சத்தின் வித்தியாசம் என்ன?
நான்கு டவர்கள் மட்டுமே இருக்கும் மைதானங்களின் ஒளி நீண்ட நெடிய உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஒளியானது, நாம் வீட்டில் இரவில் படிப்பதற்கு உபயோகிக்கும் 'டேபிள் லாம்பை' போல தலை கவிழ்ந்திருக்கும் (வெளிச்சத்தின் ஆங்கிள்). இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் மைதானங்களில், பந்து மேலிருந்து கீழ்நோக்கி வந்தால், அதனை கண்டுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல, ஏனென்றால், வெளிச்சமானது மைதானத்தில் விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, சூரிய வெளிச்சத்தை போன்ற ஒரு வெளிச்சத்தை கொடுக்க முடியாது. அதே நேரத்தில், அதிக டவர்கள் கொண்டு வெளிச்சத்தை கீழ்நோக்கி செலுத்தாமல், சீராக மைதானம் முழுவதும் ஒளியை பாய்ச்சினால் இந்த பந்தை எளிதாக பார்க்க முடியும்.
பல ஆயிரம் கோடிகள் புழங்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கு ஒளி வெள்ளங்களை மறுசீரமைப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் எவ்வளவு சீக்கிரம் செய்வார்கள் என்பதுதான் கேள்வி.