அதிக தொகையுடன் களம்
ஐபிஎல் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிலையில், அதனை அதிக தொகையுடன் அதாவது 42.70 கோடி ரூபாயுடன் கிங்ஸ் XI பஞ்சாப் அணி எதிர்கொண்டது.
அதிக விலைக்கு ஏலம் எடுத்த அணி
இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல்லுக்கு அதிக போட்டி காணப்பட்ட நிலையில், அவரை 10.75 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
ரூ.8.50க்கு ஏலம் எடுத்த கிங்ஸ் XI பஞ்சாப்
இதேபோல மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல்லையும் ரூ.8.50 கோடிக்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
விளக்கம் அளித்த அனில் கும்ப்ளே
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு மிடில் ஆர்டரில் வலிமையான வீரர் தேவைப்பட்டதாலேயே ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மாக்ஸ்வெல்லுக்கு அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதாக அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே விளக்கம்
அணிக்கு வலிமையான பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களும் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ள கும்ப்ளே, அதற்கான இடைவெளிகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கும்ப்ளே மகிழ்ச்சி
அணிக்கு ஆல் ரவுண்டர்கள் கிடைப்பது வரம் என்று தெரிவித்துள்ள கும்ப்ளே, கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஜிம்மி நீசம், ஷெல்டன் காட்ரெல் மற்றும் கிறிஸ் ஜோர்டான் போன்ற ஆல்-ரவுண்டர்கள் கிடைத்துள்ளது அணியின் அதிர்ஷ்டம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்காக அணி ஏலத்தில் அதிகளவில் செலவழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகமது ஷமிக்கு ஈடானவர்
உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ள இந்திய இளம் பந்துவீச்சாளர் இஷான் போரலையும் கிங்ஸ் XI பஞ்சாப் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் முகமது ஷமிக்கு ஈடானவர் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கேப்டன் கே.எல். ராகுல்
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு வரும் ஐபிஎல் 2020 சீசனில் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அணி ஏலத்தின் இடையில் அறிவித்தது. இந்நிலையில் அணியில் நிகோலஸ் பூரன் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் உள்ள நிலையில், விக்கெட் கீப்பிங்கில் யார் செயல்படுவார்கள் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கும்ப்ளே கூறினார்.