ஆசிய கோப்பை ரத்து
ஆனால், இலங்கையில் இப்போது கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (மே.19) மட்டும் ஒரேநாளில் 3,623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டை பொறுத்தவரை இந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது மிக மிக அதிகம். இந்த இக்கட்டான சூழலில் தான் ஆசிய கோப்பைத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களுக்கு தடை
இதுகுறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஆஷ்லே டி சில்வா, "கோவிட் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆசியக் கோப்பை தொடரை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒருமனதாக இந்த முடிவினை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கவிருந்தன. இலங்கையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த 10 நாட்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடருக்கு வாய்ப்பில்லை
அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவல் குறைந்து நிலைமை சகஜ நிலைமைக்கு திரும்பினால் கூட, 2023ல் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை, ஆசிய கோப்பை தொடரை நடத்த வாய்ப்பில்லை. ஏனெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து நாடுகளுக்கான ஷெட்யூல் நிரம்பி வழிகின்றன என்று கூறியுள்ளார். எனினும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு நடத்தலாமா என்பது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நாகினி டான்ஸ்
கடந்த முறை, 2018ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பை துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைத் வென்றது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பெற வைப்பாரே.. நினைவிருக்கிறதா? அதாங்க.. வங்கதேச வீரர்கள் 'நாகினி' டான்ஸ்-லாம் கூட ஆடினார்களே! ஆங்.. அதுதான் கடைசியாக நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடர்.
2 ஆண்டுகள் காத்திருக்கணும்
ஆனால், இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தது இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் தான். அரசியல் காரணங்களால் இரு அணிகளும் இப்போது எந்த போட்டியிலும் விளையாடாமல் இருக்கின்றன. அட்லீஸ்ட், இந்த ஆசிய கோப்பையிலாவது இந்தியா - பாகிஸ்தான் மோதுவதை பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்ளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏமாற்றம் தான்!.