கங்காருவுக்கு வயிற்றில் புலி’!
சென்னை: தலைப்பை படித்தவுடன் தப்பு இருப்பதுபோல் தோன்றலாம். நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றாலும், இந்திய புலிகளுக்கு எதிரான தொடர் சற்று கடினமாகவே இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருவதால், கங்காரு அணியின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது
இப்ப தலைப்பை படிச்சி பாருங்க! ஆங், சரியாக இருக்கிறதா.

இந்திய அணியுடன், 5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் விளையாட உள்ளது ஆஸ்திரேலியா அணி. அதற்கு முன்பாக, இலங்கைக்கு சென்ற இந்திய அணி, டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என மூன்றுத் தொடரையும் அபார வென்றது.
வங்கதேசம் சென்ற ஆஸ்திரேலியா, முதல் டெஸ்டில் அடைந்த தோல்வியை இரண்டாவது டெஸ்டில் வென்று சமன் செய்தது.
இந்தத் தொடர் எப்படி இருக்கும் என்று இந்தியா, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களின் கணிப்பின்படி, இந்தியா 4-1 என்ற கணக்கில் வெல்லும் என்று கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கும், இந்தத் தொடர் இலங்கைக்கு எதிரான தொடர்போல இருக்காது. போனோம், அடித்தோம், வென்றோம் என்று இருக்காது. சற்று சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிராக, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. ஏதோ டி-20 போட்டியில் விளையாடுவதுபோல் அவர்கள் விளையாடியுள்ளனர்.
வரும் 17ம் தேதி சென்னையில் முதல் ஒருதினப் போட்டி நடக்க உள்ளது. அதற்கு முன், நேற்று நடந்த, பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சற்று கவனிக்க வேண்டிய சமாசாரம் தான்.
ஆஸ்திரேலியா அணியில், நான்கு பேர் அரைசதம் அடித்துள்ளனர். ஆஷ்டன் அகார், 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இதையெல்லாம் சமாளித்தால், கங்காருவின் வயிற்றில் நமது புலிகள், புளியைக் கறைக்கலாம். டி.ஆர். பாணியில் நமது அணியைப் பற்றி சொல்ல வேண்டுமானால், இது அசராத புலி, இது வெற்றி புலி, இது பாயும் புலி, இது சீறும் புலி.
Story first published: Wednesday, September 13, 2017, 20:35 [IST]
Other articles published on Sep 13, 2017


Click it and Unblock the Notifications