மும்பை: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்து நீதிபதி லோதா கமிட்டி அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்போம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற கிரிக்கெட் பிக்ஸிங் விவகாரத்தை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிபதி லோதா கமிட்டி விசாரித்து தீர்ப்பளித்தது.
இதன்படி சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறியதாவது:
சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உள்ளது. தீர்ப்பு விவரம் குறித்து முழுமையாக அறிந்த பிறகு, அது தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கருத்து வெளியிடப்படும்.
கிரிக்கெட் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையையும் உருவாக்க வேண்டிய கடமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது.
இவ்வாறு ஜக்மோகன் டால்மியா கூறினார்.
இதே கருத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அனுராத் தாகூரும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். கிரிக்கெட் விளையாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்வோம் என்றார்.