உலகளவில் பெரிய மைதானம்
அகமதாபாத்தில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள மோதரா மைதானம் உலகளவில் மிகவும் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 1,14,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்கலாம். இதுவரை இந்த மைதானத்தில் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
மோதராவில் நடைபெறும் போட்டிகள்
ஆயினும் வரும் பிப்ரவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியினர் இந்த மைதானத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக தற்போது இந்த மைதானத்தில் பயிற்சி போட்டி இன்று நடத்தப்படுகிறது.
கங்குலி -ஜெய் ஷா தலைமையில் போட்டி
பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நாளை இங்கு நடைபெறவுள்ள நிலையில், முன்னதாக இன்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா தலைமையில் பிசிசிஐ உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டியில் விளையாட உள்ளனர். கடந்த 2011க்கு பிறகு போட்டிகள் எதிலும் பங்கேற்காத சவுரவ் கங்குலியின் ஆட்டத்தை இன்று பார்க்கலாம்.
பல்வேறு விஷயங்கள் ஆலோசனை
நாளை நடைபெறவுள்ள பிசிசிஐயின் 89வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இங்கிலாந்து தொடர், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் புதிதாக இணைக்கப்பட உள்ள இரண்டு அணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் பிசிசிஐயின் 28 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.