புவனேஸ்வர் காயம்
புவனேஸ்வர் குமார் 2018ஆம் ஆண்டில் பல முறை காயத்தால் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திணறி வந்தார். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மட்டுமே ஆடிய அவர் மீண்டும் காயம் அடைந்தார்.
நீண்ட நாட்கள் பயிற்சி
புவனேஸ்வர் குமார் ஒவ்வொரு முறையும் காயத்திற்கு பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வந்ததால், அதை தீர்த்து வைக்க வேண்டிய தேசிய கிரிக்கெட் அகாடமி இந்த முறை நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டு அவருக்கு உடற்தகுதி பயிற்சிகள் அளித்தது.
பல ஸ்கேன்கள்
இந்திய அணிக்கு திரும்பும் முன் அவருக்கு மூன்று முறை குறைந்த இடைவெளிகளில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவில், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, முழுமையாக குணமாகி விட்டார் என பரிசோதித்து இந்திய அணிக்கு அனுப்பி வைத்தது தேசிய கிரிக்கெட் அகாடமி.
மீண்டும் ஆடவந்தார்
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார் புவனேஸ்வர் குமார். அந்த தொடரின் மூன்றாவது போட்டியிலேயே வயிற்றுப் பகுதியில் கடும் வலி காரணமாக பாதிக்கப்பட்டார்.
குடலிறக்கம்
அப்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு குடலிறக்கம் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், புவனேஸ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்திய அணி அதிர்ச்சி
தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு பல முறை பரிசோதனைகள் செய்தும், அவரது குடலிறக்கப் பிரச்சனையை முன்கூட்டியே அறியவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடும் அதிருப்தி அடைந்தனர்.
புகார்
புவனேஸ்வர் குமார் மோசமான நிலையை அடைய தேசிய கிரிக்கெட் அகாடமியும் ஒரு காரணம் என உறுதியாக இருக்கும் இந்திய அணி நிர்வாகம், இது குறித்து பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் டிராவிட்டை சந்தித்து பேசினார்.
புவனேஸ்வர் குமார் நிலை
இந்த விவகாரத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர் புவனேஸ்வர் குமார் தான். கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு போட்டிகளை காயம் காரணமாக இழந்துள்ளார் அவர்.
அணியில் வாய்ப்பு
அவரது குடலிறக்க பாதிப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். அதன் பின் நீண்ட ஓய்வுக்குப் பின் தான் அவர் பயிற்சிகளை தொடங்க முடியும். அதனால், இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பெற பல மாதங்கள் ஆகலாம்.
கடினம் தான்
ஆனால், அதற்குள் இந்திய அணியில் இளம் வீரர்கள் தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் தங்கள் இடங்களை உறுதி செய்தால், புவனேஸ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினமாக மாறும்.
நம்பி ஏமாந்தார்
தேசிய கிரிக்கெட் அகாடமி மீது பல இந்திய வீரர்கள் நம்பிக்கை இல்லாமல் தனிப்பட்ட முறையில் நிபுணர்களை வைத்து சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். சமீபத்தில் பும்ரா கூட அப்படித்தான் செய்தார். ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியை நம்பி ஏமாந்து போய் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டுள்ளார் புவனேஸ்வர்.