இந்தியா -நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் இந்தியாவிற்கு அதிரடியாக நெருக்கடி கொடுத்து, இரண்டு இன்னிங்சிலும் 165 மற்றும் 191 ரன்களில் இந்தியாவை ஓரங்கட்டினர்.
காட்டம் காண்பித்த விராட் கோலி
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து 7 போட்டிகளில் 3 அணிகளுக்கிடையிலான தொடர்களை கைகொண்ட இந்திய அணி 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இத்தகைய வலிமையான டெஸ்ட் அணியுடன் மோதி நியூசிலாந்து அணி வெற்றி கொண்டுள்ளது. இந்த தோல்வியையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, ஒரு போட்டியில் தோற்றால் அனைத்தும் முடிந்துவிட்டதாக ஆகாது என்று தெரிவித்துள்ளார்.
டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் அபாரம்
திறமையான பேட்டிங் மட்டுமின்றி வலிமையான பந்துவீச்சும் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அணியின் பௌலர்கள் டிம் சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியாவின் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜாமீசனும் 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கருத்து
இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்தின் முதல் டெஸ்ட் போட்டி ஆச்சரியம் அளித்ததாக நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இத்தகைய 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலான வெற்றியை நியூசிலாந்து அணி பெற்றதேயில்லை என்று தெரிவித்த அவர், அணி வீரர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட நெருக்கடியே இத்தகைய வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
கேரி ஸ்டெட் அறிவுறுத்தல்
முதல் போட்டியில் இருந்த இதே தீவிரத்துடன் நியூசிலாந்து வீரர்கள் அடுத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள கேரி ஸ்டெட், முதல் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ள இந்திய அணி, இரண்டாவது போட்டியில் மிகுந்த வெறியுடன் ஆட முற்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
கேரி ஸ்டெட் அறிவிப்பு
தன்னுடைய முதல் குழந்தை பிறப்பையொட்டி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த நீல் வேக்னர், தற்போது கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லி ஓவல் மைதானத்தில் வரும் 29ம் தேதி துவங்கவுள்ள இரண்டாவது போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் கேரி ஸ்டெட் அறிவித்துள்ளார். இதன்மூலம் நியூசிலாந்தின் வலிமை கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.