கொழும்புவில் போட்டிகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டிராவிட் கோச்
இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
பலவீனமான அணி
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவருமான அர்ஜுனா ரணதுங்கா கூறுகையில், ""இரண்டாம் தர இந்திய அணி, இங்கு வருவது எங்கள் கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். வருமான தேவைகள் காரணமாக இந்திய பி அணியுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய இலங்கை நிர்வாகத்தை நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியா தங்கள் சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி பலவீனமான அணியை இங்கு விளையாட அனுப்பியது. இதற்கு எங்கள் வாரியத்தை தான் குறை கூற முடியும்" என்று சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
வலிமையான அணி தான்
இதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், வலிமையான இந்திய அணி தான் இலங்கைக்கு வந்திருக்கிறது. அந்த அணியின் பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் தான் என்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக், "இலங்கையில் உள்ள இந்திய அணியைப் பார்க்கும்போது, இலங்கை புகார் கூறுவதற்கு ஒன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த அணி, உலகின் எந்த முழு பலம் கொண்ட அணிக்கும் சவால் விடுக்கும் அணி தான்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
இந்தியா ஜெயிச்சுடும்
அதுமட்டுமல்ல, இத்தொடரில் இலங்கைக்கு தான் சிக்கல் இருக்கிறது என்றும், இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர் என இரண்டையும் எளிதில் வென்றுவிடும் என்றும் பிராட் ஹாக் ட்வீட் செய்திருக்கிறார். இதன் மூலம், நீங்க முதல்ல ஒழுங்கா விளையாடுங்க.. அப்புறம் இந்திய அணியை குறை சொல்லலாம் என்று சொல்லாமல் பூசி மொழுவியிருக்கிறார் ஹாக்.