மும்பை: தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற வைத்துள்ளார் 'தனியொருவன்' ட்வைன் பிராவோ.
2 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடருக்குள் திரும்பி வந்துள்ள, தல டோணி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றியோடு தனது பயணத்தை துவங்கி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பிராவோதான்.
பந்து வீச்சில் வலிமையாக உள்ள மும்பைக்கு எதிராக 166 ரன்களை எடுக்க விரட்டிய சென்னை அணிக்கோ ஆரம்பம் முதல் அடிமேல் அடி. ஷேன் வாட்சன் 16, அம்பட்டி ராயுடு 22, சின்ன தல சுரேஷ் ரெய்னா 4 ரன், தல கேப்டன் டோடணி 5 ரன்களில் நடையை கட்டியதால் அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள்.
118 ரன்களுக்கு 8வது விக்கெட்டாக மார்க் உட்டை இழந்தபோது, யாருமே சிஎஸ்கே வெற்றி பெறும் என நினைக்கவில்லை. அப்போதுதான் விஸ்வரூபம் எடுத்தார், அதுவரை பொறுமை காத்த பிராவோ. சென்னை அணி கடைசி பந்து வரை போராடும் சுத்த வீரன் என்பதை நிரூபிக்க பிராவோ விஸ்வரூபம் எடுத்தார்.
மொத்தம் 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் வெறும் 30 பந்துகளில் 68 ரன்களை அவர் எடுத்தபோது மும்பை அணி நடுங்கிவிட்டது. ஆனால் 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிராவோ, பும்ரா பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனால் கடைசி ஓவரில் த்ரில் ஏற்பட்டது. ஆனால் காயத்தால் வெளியே உட்கார்ந்திருந்த ஜாதவ் மீண்டும் திரும்பி வந்து, சிக்சரும், சிங்கிளும் விளாச சிஎஸ்கே த்ரில் வெற்றியை ருசித்தது. பிராவோவுக்கே மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. 2வருடம் கழித்து திரும்பி வந்த சிஎஸ்கே பட்டையை கிளப்பி வெற்றி பெற பிராவோ பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.