சிஎஸ்கேவின் திட்டம்
டுவைன் பிராவோவுக்கு மாற்று வீரர் என்ற நோக்கத்துடன் சாம் கரணுக்கு குறி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவரை விட்டுவிட்டு, இங்கிலாந்தின் மற்றொரு ஸ்டார் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை வாங்கி இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. இதே போல 2022ம் ஆண்டின் U-19 உலககோப்பையில் விளையாடிய ஷாயிக் ரஷித், ஹரி நிசாந்த ஆகியோரை சிஎஸ்கே வாங்கியிருந்தது.
தோனிக்கு மாற்று வீரர்
ஆனால் தோனிக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில் மட்டும் சிஎஸ்கே கவனமே செலுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். தோனிக்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டரில் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் ஆடுவது, விக்கெட் கீப்பிங் செய்வதற்கு நாராயண் ஜெகதீசன் மட்டுமே சிறந்த தேர்வாக பார்க்கப்பட்டார். அதற்கேற்றார் போல அவர் நல்ல விலைக்கும் வந்தார்.
பிரமாண்ட சாதனை
சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி நாராயண் ஜெகதீசன் உலக சாதனை படைத்திருந்தார். இதுமட்டுமல்லாமல் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற ரோகித்தின் ரெக்கார்டையும் உடைத்தார். அப்படிபட்ட வீரர் வெறும் ரூ. 20 லட்சத்திற்கு தான் ஏலத்தில் கொண்டு வரப்பட்டார்.
கைவிரித்த சிஎஸ்கே
தொடக்கத்தில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இரு அணிகளும் சீரான வேகத்தில் தொகையை உயர்த்த, ஒரு கோடியை நெருங்கியது. ஆனால் ஜெகதீசனுக்காக ரூ. 1 கோடியை கூட செலவளிக்க சிஎஸ்கே தயாராக இல்லை. இதனால் உலக சாதனை படைத்த வீரரை வெறும் ரூ. 90 லட்சத்திற்கு தூக்கி சென்றது கொல்கத்தா அணி. இதனால் இனி தோனிக்கு மாற்று என்ன செய்வீர்கள் என சிஎஸ்கே மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.