விசாகப்பட்டினம்: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல் என்று சிஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த ஒன்றரை மாதங்களாக ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்த இந்த தொடரில் நாளை இறுதிப்போட்டி. பரபரப்பான இந்த போட்டியில் இறுதிக்கு முதல் ஆளாக மும்பை முன்னேறியிருக்கிறது.

நேற்றைய குவாலிபயர் 2 போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அபாரமாக வெற்றி பெற்று ஜம்மென்று பைனலுக்குள் நுழைந்திருக்கிறது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் முதலில் களம் இறங்கிய டெல்லி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
148 ரன்களை நோக்கி களம் இறங்கிய சென்னை அணியில் டூ பிளெசிஸ், வாட்சன் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்களை குவித்தது. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 151 ரன்களை எடுத்து வென்றது.
சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பதால் அந்த அணியின் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர். அவர்களை விட உற்சாக வெள்ளத்தில் இருப்பவர் சென்னை அணியின் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் தான். வழக்கம் போல தமிழில் அவர் டுவீட்டி இருக்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் தமது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK' என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.