டெல்லி பெரோஸ் ஷா மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு… விரைவில் விழா..!
டெல்லி: மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் பெயரை, டெல்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள வளாகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மைதானத்தின் பெயர் பெரோஸ் ஷா கோட்லா என்றே தொடரும் என்றும் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் பெயர்சூட்டு விழாவில் மைதானத்தின் ஸ்டேண்ட் ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் சூட்டப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இத்தகவலை உறுதி செய்துள்ள டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் ஷர்மா, அருண் ஜெட்லியின் ஆதரவும், ஊக்கமளிப்பும் தான் கோலி, சேவாக், கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, ரிஷப் பன்ட் உள்ளிட்ட வீரர்கள் இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்க காரணமாக அமைந்தது என்றார். டெல்லி கிரிக்கெட் சங்கமும் தமது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளது.
விரைவில் விழா
டெல்லியின் ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள பெயர்சூட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, டெல்லியில் உள்ள யமுனா விளையாட்டு வளாகத்திற்கு மறைந்த அருண் ஜெட்லியின் பெயரை பாஜக எம்பியும், கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் சூட்டினார்.
மறைவு வேதனை
ஜெட்லியின் மறைவுக்குப் பின் அவரது கிரிக்கெட் சங்கப் பணி குறித்து, முன்னாள் வீரர் சேவக் நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது: அருண் ஜெட்லியின் மறைவு வேதனையளிக்கிறது. பொதுவாழ்வில் சிறப்பாக செயல்பட்ட அதே வேளையில், டெல்லி கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.

தனிப்பட்ட முறையில் உறவு
ஒரு காலத்தில் டெல்லி வீரர்கள் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால், டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த சமயத்தில் நான் உட்பட பலரும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. வீரர்களின் தேவைகளை அறிந்து, பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவருடன் நல்ல உறவு இருந்தது என்றார்.

கோலிக்கு பெருமை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் துணை தலைவராகவும் அருண் ஜெட்லி இருந்துள்ளார். பிஷன் சிங் பேடி மற்றும் மொகிந்தர் அமர்நாத் ஆகியோருக்கு பிறகு டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு தனது பெயரை வழங்கும் 3வது வீரர் என்ற பெருமை கோலிக்கு இப்போது கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications