நான் முயற்சி பண்ணியும் ரன் எடுக்க முடியலை.. அதுக்கு நான் என்ன பண்றது.. தவான் விளக்கம்
துபாய் : ஆசிய கோப்பையில் இன்று இந்தியா, வங்கதேசம் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டி பற்றி பேசிய தவான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன் மோசமான பேட்டிங் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தான் இங்கிலாந்துக்கு திட்டங்களோடு சென்றும் அது வேலை செய்யவில்லை. அதில் தனக்கு எந்த அவமானமும் இல்லை என கூறியுள்ளார் தவான்.
[ எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. ஆசிய கோப்பைக்கு பின் பாக். கேப்டன் புலம்பல் ]

அணியில் இடம் கிடைக்குமா?
ஆசிய கோப்பை முடிந்த உடன் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது இந்தியா. அதற்கான இந்திய அணியில் தவானுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய தவான், இப்போது ஆசிய கோப்பையில் பட்டையை கிளப்பி வருகிறார். எனினும், தவான் பந்து ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் ரன் குவிக்க தடுமாறுகிறார் என்பதால், அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

நல்லாதானே ஆடுறேன்
இது பற்றி பேசிய தவான், "நான் டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி எதில் ஆடினாலும், இந்த விளையாட்டை பற்றிய அறிவோடு தான் விளையாடுகிறேன். இப்போது நன்றாக ரன் குவித்து இருக்கிறேன். இது டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க உதவுமா என பார்க்கலாம்" என கூறினார்.

எந்த அவமானமும் இல்லை
தன் டெஸ்ட் போட்டி பார்ம் குறித்து பேசிய அவர், "இங்கிலாந்து டெஸ்டில் நான் எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன். ஆனால், ரன் குவிக்க முடியவில்லை. மற்றவர்கள் என்னைவிட நன்றாக ரன் குவித்தார்கள். நான் அதை ஒப்புக்கொள்கிறேன். இதில் எந்த அவமானமும் இல்லை. சில சமயம் திட்டங்கள் வேலை செய்கிறது. சில சமயம் செய்வதில்லை" என கூறினார்.

நாளை இந்தியா வெல்லும்
வங்கதேச அணியை பற்றி பேசிய தவான், "வங்கதேசம், பாகிஸ்தானை விட நல்ல கிரிக்கெட் ஆடியதால் இறுதியில் இருக்கிறது. அவர்கள் எந்த அழுத்தத்திலும் ஆடக் கூடியவர்கள். பெரிய அணிகளுக்கு எதிராக கூட எந்த பயமும் இன்றி ஆடுகிறார்கள். அவர்கள் இறுதியில் இருப்பதே பெரிய விஷயம் தான். நாளை நாங்கள் தான் வெல்வோம். ஆனால், ஒருநாள் வங்கதேசம் கோப்பைகளை வெல்லும்" என கூறினார்.


Click it and Unblock the Notifications