துபாயில் ரெய்னா
சுரேஷ் ரெய்னா துபாயில் சென்னை அணியுடன் ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்தார். அப்போது அவர் பதிவிட்ட சமூக வலைதள பதிவுகளில் கூட எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. எல்லாம் சுமூகமாக இருப்பதாகவே தோன்றியது.
ரெய்னா விலகல்
எனினும், திடீரென 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளார் சுரேஷ் ரெய்னா. முதலில் இது பற்றி சிஎஸ்கே அணி அறிவித்த போது தனிப்பட்ட காரணங்களால் சுரேஷ் ரெய்னா விலகியதாக கூறி இருந்தது. ஆனால், உண்மையான காரணம் என்ன? என அப்போதே பரபரப்பு ஏற்பட்டது.
சொந்த காரணம்?
ரெய்னாவின் மாமா மரணம், அத்தை உயிருக்கு போராடுகிறார் என்பதால் அவர் நாடு திரும்பியதாக ஒரு தகவல் வந்தது. ஆனால், அது உண்மையல்ல எனக் கூறும் வகையில் சிஎஸ்கே அணிக்குள் நடந்த பரபரப்பான சம்பவங்கள் பற்றி செய்திகள் வெளியானது.
ஹோட்டல் அறை
ரெய்னா ஹோட்டல் அறை வசதியாக இல்லை எனவும், தோனிக்கு கொடுத்தது போல பால்கனி வைத்த அறை வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதை அடுத்து அணிக்குள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டதை அடுத்து அவர் இந்தியாவுக்கே திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.
கடுமையான வார்த்தைகள்
இந்த விவகாரம் குறித்து பேசிய அணியின் உரிமையாளர் சீனிவாசன், சுரேஷ் ரெய்னாவை கடுமையாக சாடி உள்ளார். வெற்றி சிலரது தலைக்குள் ஏறி விடும் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். தோனி சொல்லியும் ரெய்னா கேட்காமல் இந்தியா திரும்பியதாக கூறப்படும் நிலையில், தோனி என்ன மனநிலையில் இருக்கிறார்?
கொரோனா பாதிப்பு
ரெய்னா விவகாரம் மட்டுமின்றி, சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பும் உள்ளது. அது பற்றி தோனி என்ன நினைக்கிறார் என்பது குறித்து சீனிவாசன் பேசினார். தோனி நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
கவலை இல்லை
"நான் தோனியிடம் பேசி விட்டேன். பாதிப்பு எண்ணிக்கை அதிகம் ஆனாலும் கவலை இல்லை. அவர் வீரர்களிடம் ஸூம் இணைப்பில் பேசி உள்ளார். அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கூறி உள்ளார். வெளியே தெரியாமல் யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாதுஎன அவர் கூறி உள்ளார்" என்றார்.
மீண்டு விடுவார்கள்
மேலும், பாதிப்புக்கு உள்ளான இரு சிஎஸ்கே வீரர்களும் (தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட்) இளம் வயது கொண்டவர்கள் என்பதால் இதில் இருந்து மீண்டு விடுவார்கள் என சீனிவாசனிடம் நம்பிக்கையாக கூறி உள்ளார் கேப்டன் தோனி.
உறுதியான கேப்டன்
"என்னிடம் உறுதியான கேப்டன் இருக்கிறார். தோனி எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். அது அணியில் இருக்கும் அனைவருக்கும் அதிக தன்னம்பிக்கை அளித்துள்ளது" என்றார் சீனிவாசன். இந்த பேச்சில் தான் ரெய்னாவை குறிப்பிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோனி கவலைப்பட மாட்டார்
தோனி எதைக் குறித்தும் கவலைப்பட மாட்டார் என ரெய்னா விலகியதையும் சேர்த்து தான் சீனிவாசன் கூறி உள்ளார் என இணையத்தில் சிலர் கூறி வருகின்றனர். தோனி - சுரேஷ் ரெய்னா இடையே என்ன நடந்தது என அவர்களில் ஒருவர் பேசினால் தான் தெரிய வரும்.