மீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக்.... பேட்டிங்கில் கலக்கல்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்களில் மிகவும் சீனியர் என்ற பெருமை உள்ளவர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தவர், தற்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை உருவாக்கி கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. வழக்கமாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பருடன் செல்லும் இந்திய அணி, இந்த முறை, ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளுக்கான அணியில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தனர்.
அதில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் தினேஷ் கார்த்திக். இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் விருத்தமன் சாகா காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி-20, ஒருதினப் போட்டி, டெஸ்ட் என எந்த வகை போட்டியாக இருந்தாலும், அதில் தனது அனுபவத்தை திறம்பட வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணிக்காக 2004ல் விளையாடத் துவங்கிய கார்த்திக், இதுவரை 24 டெஸ்ட்களில் 1,004 ரன்கள் எடுத்துள்ளார். 79 ஒருதினப் போட்டிகளில், 1,496 ரன்கள் எடுத்துள்ளார். 20 டி-20 போட்டிகளில் 269 ரன்கள் எடுத்துள்ளார்.

நீண்ட அனுபவம்
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின்போது, இந்தியா தனது 100வது டி-20 போட்டியில் பங்கேற்றது. இந்தியாவின் முதல் டி-20 போட்டியில் பங்கேற்ற வீரர்களில், மூன்று பேர் மட்டுமே 100வது டி-20 போட்டிக்கான அணியிலும் இருந்தனர். தோனி, ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்த சாதனையைப் புரிந்தவர்கள்.

அதிரடி ஆட்டம்
இந்தாண்டு துவக்கத்தில் நடந்த நிதாஸ் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான பைனலில் 8 பந்தில் 29 ரன்கள் எடுத்தார் தினேஷ். அதுவே கோப்பையை வென்று தந்தது. அதற்கு முன், அவ்வப்போது இந்திய அணியில் தலைகாட்டிய தினேஷ், அணியின் முக்கிய வீரராக மாறினார். இதைத் தவிர, ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதுடன், அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இது அவர் தவிர்க்க முடியாத வீரராக்கியது.

மீண்டும் டெஸ்ட் அணியில்
மிக நீண்ட அனுபவம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2010ல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மீண்டும் நிரூபித்தார்
தற்போது நடந்துவரும் எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாளில் 7வது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 94 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கடின உழைப்பு, பொறுமைக்கு எப்போதும் பலன் உண்டு என்பதை தினேஷ் கார்த்திக் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications