நீண்ட அனுபவம்
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின்போது, இந்தியா தனது 100வது டி-20 போட்டியில் பங்கேற்றது. இந்தியாவின் முதல் டி-20 போட்டியில் பங்கேற்ற வீரர்களில், மூன்று பேர் மட்டுமே 100வது டி-20 போட்டிக்கான அணியிலும் இருந்தனர். தோனி, ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்த சாதனையைப் புரிந்தவர்கள்.
அதிரடி ஆட்டம்
இந்தாண்டு துவக்கத்தில் நடந்த நிதாஸ் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான பைனலில் 8 பந்தில் 29 ரன்கள் எடுத்தார் தினேஷ். அதுவே கோப்பையை வென்று தந்தது. அதற்கு முன், அவ்வப்போது இந்திய அணியில் தலைகாட்டிய தினேஷ், அணியின் முக்கிய வீரராக மாறினார். இதைத் தவிர, ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதுடன், அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இது அவர் தவிர்க்க முடியாத வீரராக்கியது.
மீண்டும் டெஸ்ட் அணியில்
மிக நீண்ட அனுபவம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2010ல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
மீண்டும் நிரூபித்தார்
தற்போது நடந்துவரும் எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாளில் 7வது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 94 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கடின உழைப்பு, பொறுமைக்கு எப்போதும் பலன் உண்டு என்பதை தினேஷ் கார்த்திக் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.