இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை வரும் 8ம் தேதி முதல் நடத்தவுள்ளது.
நெருக்கடி சூழலில் கிரிக்கெட் போட்டி
ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்தப்பட உள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதலில் உள்ளது. இந்த போட்டியை முன்னெடுத்ததன் மூலம் கொரோனா பாதிப்பிலும் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பாக நடத்தும் பெருமை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்துள்ளது.
வீராங்கனைகளுக்கு பயிற்சி
இந்நிலையில், அடுத்ததாக மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு வரும் திங்கட்கிழமை முதல் தனிநபர் பயிற்சியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துவங்கவுள்ளது. இதற்கென ஹெதர் நைட், எமி ஜோன்ஸ் உள்ளிட்ட 24 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, யார்க்ஷயரில் உள்ள எமரால்ட் ஹெட்டிங்லி உள்ளிட்ட 6 இடங்களில் அவர்கள் பயிற்சியை துவக்கவுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் இசிபி
இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியினர் மோதும் முத்தரப்பு தொடர் இந்த ஆண்டின் இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த தொடர் கேள்விக்குறியானது. இந்நிலையில் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் தென்னாப்பரிக்காவுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக தற்போது வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.